மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 5வது சதத்தை விளாசி சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக ஆட்டத்தை டிரா செய்ததோடு, இங்கிலாந்து அணியின் ஆதிக்க மனநிலைக்கும் இந்திய அணி முடிவு கட்டியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இந்திய அணி பறிகொடுத்த நிலையில், இந்திய அணியின் கேஎல் ராகுல் - சுப்மன் கில் இணை 2 செஷன்களும் விக்கெட்டை கொடுக்காமல் ஆடினார்கள்.

தொடந்து 5வது நாள் ஆட்டத்தில் கேஎல் ராகுல் 90 ரன்களிலும், சுப்மன் கில் 103 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றி உறுதி என்று அந்நாட்டு வீரர்களும், ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால் ஜடேஜா - வாஷிங்டன் சுந்தர் இணை நிதானமாக ரன்களை சேர்த்து கொண்டே இருந்தது. தேநீர் இடைவேளை வரை நிதானம் காட்டிய இவர்கள், அதன்பின் அதிரடிக்கு திரும்பினார்கள்.
இருவரும் அரைசதம் அடித்த போது, இந்திய அணி முன்னிலை பெறத் தொடங்கியது. 70 ரன்களை கடந்தபின் ஜடேஜா ஸ்பின்னர்களை கொஞ்சம் கூட மதிக்காமல் வெளுத்து கட்டினார். சதத்தை நெருங்கிய போது பென் ஸ்டோக்ஸ் வந்து டிராவில் முடித்து கொள்ளலாமா என்ற கேட்ட போதும், ஜடேஜா கடைசி 15 ஓவர்களை வீசுங்கள் என்று அறிவுறுத்தினார்.
பின்னர் ஜோ ரூட் பவுலிங்கில் சிக்ஸ் அடித்து ஜடேஜா தனது 5வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். இங்கிலாந்து மண்ணில் ஜடேஜா அடிக்கும் 2வது சதம் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து மண்ணில் நம்பர் 6 பேட்ஸ்மேனாக களமிறங்கி 2 சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார்.
இதன்பின் வாஷிங்டன் சுந்தரும் சதம் அடிக்க, இந்திய அணி டிரா செய்வதற்கு ஒப்புக் கொண்டது. இதன் மூலமாக இங்கிலாந்து அணி 2-1 என்று முன்னிலை பெற்றாலும், அடுத்த 3 நாட்களில் அடுத்த டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இதனால் இந்திய அணி மனதளவில் அதிக நம்பிக்கையுடன் அந்தப் போட்டியில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.