மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வீரர்கள் விவரத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் இந்திய அணியுடன் இணைந்துள்ளார். அதேபோல் தமிழக இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டுள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகிய 4 ஸ்பின்னர்கள் இருக்கும் சூழலில், வாஷிங்டன் சுந்தர் தேவையில்லை என்று பார்க்கப்பட்டது. ஏனென்றால் அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் ஒரே மாதிரியான வீரர்கள் தான். அதுமட்டுமல்லாமல் நீண்ட நாட்களாக வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் இருந்தாலும், பெயரவிலான வாய்ப்புகளை கூட பெறவில்லை.
இந்த நிலையில் ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தமிழ்நாடு அணி முன்னேறியுள்ளது. 7 ஆண்டுகளுக்கு பின் ரஞ்சி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதால், சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அரையிறுதி சுற்றில் தமிழ்நாடு அணி வலிமை வாய்ந்த மும்பை அணியை மும்பை மண்ணில் எதிர்கொள்கிறது.
இதனால் தமிழ்நாடு ரசிகர்கள் பலரும் தமிழ்நாடு அணி மேலும் வலிமை பெறுவதற்காக வாஷிங்டன் சுந்தரை அனுப்ப வேண்டும் என்று கருத்து பதிவிட்டு வந்தனர். ஏனென்றால் முகேஷ் குமார் உள்ளிட்டோர் ரஞ்சி டிராபி தொடரில் விளையாட அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் தமிழ்நாடு அணிக்காக ரஞ்சி அரையிறுதியில் விளையாட வாஷிங்டன் சுந்தர் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணியுடன் வாஷிங்டன் சுந்தர் இணைந்துள்ளார். இதனை தொடர்ந்து கேப்டன் சாய் கிஷோருடன் இணைந்து வாஷிங்டன் சுந்தர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. இந்த போட்டி முடிவடைந்த பின் தேவையென்றால் வாஷிங்டன் சுந்தர் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.