ராஜ்காட் : இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியை பல ரசிகர்களும் மனதுடன் ஒன்றி போய் பார்த்தார்கள். இதற்குக் காரணம் சர்பிராஸ் கான் முதல் முறையாக இந்தியாவுக்காக விளையாடியது தான்.
பல ஆண்டுகளாக வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில் சர்பிராஸ்கானுக்கு முதல் முறையாக நேற்று வாய்ப்பு கிடைத்தது. இதனை அவர் குடும்பத்தினருடன் உணர்ச்சி மிகக் கொண்டாடினார். இதன் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது.

இந்த நிலையில் சர்பிராஸ்கான் தந்தைக்கு நேற்று ஸ்பெஷல் மரியாதை செய்யப்பட்டது. மைதானத்தில் சர்பிராஸ் கானுக்கு முதல் தொப்பி வழங்கப்பட்ட போது அவருடைய தந்தையும் மனைவியும் பவுண்டரி லைனில் தான் நின்று கொண்டு இருந்தார்கள். மேலும் சர்பிராஸ் கானின் தந்தை நவ்ஷத் கான் திடீரென்று கிரிக்கெட் வர்ணனையும் செய்தார்.
கிரிக்கெட் வர்ணனையாளர் அவரை அழைத்து சர்பிராஸ் கான் குறித்து பல கேள்விகளை கேட்டு தெரிந்து கொண்டனர். தற்போது இதுதான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜகவை சேர்ந்த சின்கா என்ற நபர், சர்பிராஸ்கானின் தந்தையை மட்டும் என்ன ஸ்பெஷலா? அவருக்கு ஏன் இந்த மரியாதை? கமெண்ட்ரி பாக்ஸ்க்கு அழைத்து பேசும் அளவுக்கு விதி இருக்கிறதா?
இதற்கு முன்பு எத்தனை கிரிக்கெட் வீரர்களின் தந்தையை இப்படி அழைத்துப் பேசி இருக்கிறீர்கள் என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு இருக்கிறார். இந்த நிலையில் தற்போது அதற்கு விளக்கம் கிடைத்திருக்கிறது. சர்பிராஸ் கான் தந்தை நௌஷாத் கான் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் என்றும் ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணியில் அவர் இடம்பெற்று இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும் மும்பையில் தற்போது தலைசிறந்த கிரிக்கெட் பயிற்சியாளராக நவ்ஷாத் கான் விளங்குகிறார். கிரிக்கெட் வீரர் இக்பால் அப்துல்லா போன்ற வீரர்களுக்கெல்லாம் நவ்ஷாத் கான் தான் பயிற்சியாளராக இருந்திருக்கிறார். இதனால் சர்பிராஸ் கான் தந்தை என்பதைவிட ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற முறையில் தான் அவரை கிரிக்கெட் வர்ணனைக்கு அழைத்து இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பாஜகவின் சின்காவின் கூற்றுப்படி பார்த்தால், ஜெய்ஷா எந்த கிரிக்கெட் போட்டியில் விளையாடி தற்போது பிசிசிஐயின் செயலாளராக இருக்கிறார் என்றும் சிலர் கேள்வி கேட்டு வருகிறார்கள்.