லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்தது. இந்த சூழலில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
அதுவும் இந்திய அணியில் பும்ரா திரும்பி இருந்ததால் அனைவரின் கண்களும் இந்தியா மீது தான் இருந்தது. இதே போல் இங்கிலாந்து அணியில் நான்காண்டுகளுக்கு பிறகு ஜோப்ரா ஆர்ச்சர் டெஸ்ட் போட்டிக்கு திரும்பியிருந்தார்.

இந்த நிலையில் இரு அணியும் முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்து ஸ்கோரை சமன் செய்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 193 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.
இந்த தருணத்தில் இந்தியா தோற்றதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய அணியின் பேட்டிங் சொதப்பல் தான் இதற்கு முக்கிய காரணம். குறிப்பாக தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் 13 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 0 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜெய்ஸ்வால் தொடர்ந்து ஒரே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் அதிரடியாக ஆடுகிறேன் என்ற பெயரில் விக்கெட்டை இழப்பது இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக இருக்கின்றது.
இதேபோன்று இந்திய அணியில் இடம் பிடித்துள்ள கருண் நாயர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அவர் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை தான் 40 ரன்கள் தாண்டி இருக்கின்றார். கருண் நாயர் நல்ல பார்மில் இருந்த நிலையில் அவர் தொடர்ந்து சொதப்புவது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.
இதனால் அவருக்கு பதில் சாய் சுதர்சன் அணிக்கு வர வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இதேபோன்று லார்ட்ஸ் மைதானத்தில் முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். ஏனென்றால் இந்த ஆடுகளத்தில் கடைசியாக பேட்டிங் செய்யும்போது ரன்கள் சேர்ப்பது மிகவும் கடுமையாக மாறிவிடும். இதனால் முதலில் இந்திய அணி அதிக ரன்கள் எடுப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தது.
ஆனால் பண்ட் தேவையில்லாமல் கேஎல் ராகுல் சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக ரன் ஓடி ரன் அவுட் ஆனார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஒருவேளை பண்ட், ராகுலும் களத்தில் நின்று இருந்தால் இந்தியா இங்கிலாந்து விட முதல் இன்னிங்சில் அதிக ஸ்கோரை பெற்று இருந்து இந்நேரம் போட்டியில் வென்றிருக்கும்.
சரி இரண்டாவது இன்னிங்ஸிலும் கிடைத்த வாய்ப்பை பண்ட் வீணடித்தார். இந்திய அணியின் பந்துவீச்சை எந்த குறையும் சொல்லிவிட முடியாது. பேட்ஸ்மேன்கள் மட்டும் கொஞ்சம் பொறுப்புடன் ஆடி இருக்க வேண்டும். அதேபோல் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கும், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கும் வெறும் மூன்று நாட்கள் தான் இடைவெளி இருந்தது. இதனால் பேட்ஸ்மேன், பௌலர்கள் என பலருமே மனதளவிலும் உடலளவிலும் சோர்வடைந்து இருப்பார்கள். இதுவும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.