ராஞ்சி : இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை ராஞ்சி மைதானத்தில் தொடங்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்தாலும், அடுத்தடுத்து 2 போட்டிகளில் வென்று இந்திய அணி கம்பேக் கொடுத்துள்ளது. இதனால் பலரும் பேஸ் பால் அணுகுமுறை இந்திய மைதானங்களில் சரியா என்று இங்கிலாந்து அணியை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் 4வது போட்டியில் வெல்ல வேண்டும் என்று இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் 4வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. ஆஷஸ் தொடர் பாணியில் எதிரணியை மனநிலையோடு விளையாடும் நோக்கில் இங்கிலாந்து அணி ஒரு நாளிற்கு முன்பாகவே பிளேயிங் லெவனை அறிவித்துள்ளது.
இந்த பிளேயிங் லெவனில் இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய சுழற்பந்துவீச்சாளர் ரெஹான் அஹ்மத் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் இருவரும் நீக்கப்பட்டு, அவர்களது இடத்தில் சோயப் பஷீர் மற்றும் ராபின்சன் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ரெஹான் அஹ்மத் தனது பவுலிங்கில் ரன்களை செல்வதை பற்றி கவலையே இல்லை.
விக்கெட் எடுப்பது மட்டுமே தனது நோக்கம் என்று கூறியிருந்தார். தற்போது விக்கெட்டும் எடுக்காததால், அவர் அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் 3வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மார்க் வுட்டும் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ராபின்சன் ஏற்கனவே இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
இதனால் ராபின்சனுக்கு அளிக்கப்படும் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டான ராபின்சன் இங்கிலாந்து பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளது சாதகமாக விஷயம் தான். ஏனென்றால் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பவுலர்களின் லைன் மற்றும் லெந்த் மூலமாகவே இந்திய ஆடுகளங்களில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். அதேபோல் ராஞ்சி ஆடுகளம் ஓரளவிற்கு வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்கும்.
இதனால் இங்கிலாந்து அணியின் முடிவு சரியானதாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஆனால் மீண்டும் பேர்ஸ்டோவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. ஏனென்றால் 3 இன்னிங்ஸ்களில் சேர்த்து ஒரு அரைசதத்தை கூட பேர்ஸ்டோவ் அடிக்கவில்லை. இதனால் அவருக்கு இது கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.