லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது நடுவருடன் இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பந்தை தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லீட்ஸ் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 471 ரன்கள் குவித்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி வருகிறது. 209 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற ஸ்கோருடன் இங்கிலாந்து அணி மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.இதில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் மற்றும் ஹாரி புருக் ஜோடி சேர்ந்த அபாரமாக விளையாடினர். இதில் ஹாரி புருக், நேற்று பும்ரா வீசிய நோ பாலால் 0 ரன்னில் அவுட் ஆகியும் தப்பித்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அவர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

இந்த தருணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 80 ஓவருக்கு ஒரு முறை பந்து, பந்துவீசும் அணி விரும்பினால் மாற்றப்படும். அதற்கு இடையில் ஏதேனும் பந்து சேதம் அடைந்தால் நடுவர்கள் அதனை சோதித்து புதிய பந்தை தராமல் அதே போல் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பந்தை தருவார்கள். இந்த தருணத்தில் ஆட்டத்தின் 63 வது ஓவரில் இங்கிலாந்து அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்திருந்தபோது, பந்து சேதமடைந்து விட்டதாகவும் இதை வைத்து சரியாக பந்துவீச முடியவில்லை என்று கூறி பண்ட் நடுவரிடம் முறையிட்டார்.
ஆனால் இதற்கு நடுவர் 80 ஓவர் முடியும் வரை பந்தை தம்மால் மாற்ற முடியாது என்று கூறினார். பந்தின் வடிவம் மாறிவிட்டது என்பதை சுட்டிக்காட்டி பண்ட் பேச அதற்கு முடியவே முடியாது என நடுவர் கூறினார. இதனால் கடுப்பான ரிஷப் பண்ட், பந்தை தூக்கி எறிந்து விட்டு சென்றார்.
இதனை கவனித்த பும்ராவும் நேரடியாக நடுவருடன் சென்று பந்து சேதம் அடைந்திருப்பது உண்மைதான் என்றும் முறையிட்டார்.அதற்கு நடுவர் பும்ராவிடமும் விளக்கம் அளித்தார். இந்த சம்பவம் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் இந்த சம்பவத்திற்கு சில ஓவர்கள் அடுத்து சிராஜ், இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.