லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்டிற்குத் தனது சதம் அடிக்க வேண்டும் என்ற அவசரமே காரணம் என இந்திய வீரர் கே.எல். ராகுல் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் போட்டியின் போக்கையே மாற்றியதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்று இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், மதிய உணவு இடைவேளைக்குச் சற்று முன்பு வரை இந்தியா வலுவான நிலையில் இருந்தது. ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இடையேயான 141 ரன்கள் பார்ட்னர்ஷிப்பால், இந்திய அணி 247 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நல்ல நிலையில் இருந்தது.

மதிய உணவு இடைவேளைக்கு முந்தைய கடைசி ஓவரை இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஷோயிப் பஷீர் வீசினார். அப்போது சதம் அடிக்கும் முனைப்பில் இருந்த ராகுல், பண்ட்டிடம் தனது எண்ணத்தை இரண்டு ஓவர்களுக்கு முன்பே தெரிவித்ததாகக் கூறினார். அதன்படி உணவு இடைவேளைக்கு முன் ராகுல் சதம் அடித்து விட வேண்டும் என்பதில் ரிஷப் பண்ட்டும்முனைப்பாக இருந்தார்.
சில பந்துகளுக்குப் பிறகு, ராகுலுக்கு ஸ்ட்ரைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பண்ட் ஒரு ஆபத்தான சிங்கிளுக்கு முயன்றார். ஆனால், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸின் மின்னல் வேக ஃபீல்டிங்கால் அவர் ரன் அவுட் ஆனார். 74 ரன்களுடன் சதத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பண்ட், ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.
மூன்றாவது நாள் ஆட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், "அது ஒரு விரும்பத்தகாத நிகழ்வு. மதிய உணவு இடைவேளைக்கு முன் நான் சதம் அடிக்க வேண்டும் என்று பண்ட்டிடம் கூறினேன். பஷீர் கடைசி ஓவரை வீசியதால், எனக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நினைத்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பந்தை நேராக ஃபீல்டரிடம் அடித்துவிட்டேன்," என்றார்.
மேலும், "அந்த ரன் அவுட் போட்டியின் வேகத்தையே மாற்றிவிட்டது. அது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. யாரும் அப்படி தங்கள் விக்கெட்டை இழக்க விரும்ப மாட்டார்கள். நாங்கள் இருவரும் நல்ல நிலையில் இருந்தோம்; ஒருவராவது பெரிய ஸ்கோர் அடித்திருக்க வேண்டும்," என்று ராகுல் தனது தவறை ஒப்புக்கொண்டார்.
இந்த ரன் அவுட்டிற்குப் பிறகு, மதிய உணவு இடைவேளை வந்தது. அதன் பின் வந்து சதம் அடித்த ராகுலும் ஆட்டமிழந்ததால், இந்திய அணி கட்டுப்பாட்டை இழந்தது. அதன் பின் ரவீந்திர ஜடேஜா 72 ரன் குவித்ததை அடுத்து இந்திய அணி 387 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து அணியின் ஸ்கோரை சமன் செய்தது.