லீட்ஸ்: இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட்டை பாராட்டி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் அபாரமாக ஆடி 134 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் சதம் அடித்திருந்த நிலையில், அவர்களைத் தாண்டி ரிஷப் பண்ட் செய்த இரண்டு விஷயங்களை சுட்டிக்காட்டி சச்சின் டெண்டுல்கர் பாராட்டியிருக்கிறார்.
இந்தப் போட்டியில் ரிஷப் பண்ட், ஃபாலிங் பேடில் ஸ்வீப் (Falling Paddle Sweep) என்ற ஷாட்டை ஆடினார். அதாவது, கீழே விழுந்து பந்தை ஸ்வீப் ஷாட் முறையில் அடிப்பது. ரிஷப் பண்ட் ஆடும்போது இப்படி கீழே விழுந்து ஷாட் அடிப்பதை நாம் பார்த்திருப்போம்.

இதை சுட்டிக்காட்டி சச்சின் டெண்டுல்கர் பேசியதாவது - "ரிஷப் பண்ட் தவறுதலாக அப்படி கீழே விழுந்து அந்த ஷாட்டை ஆடுவதில்லை, மாறாக வேண்டுமென்றே, அதிபுத்திசாலித்தனமாக அவ்வாறு செய்கிறார். பண்ட் பந்து வரும் முன் கீழே குனியும் போது, பந்துக்கு அடியில் பேட்டை கொண்டு செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. அதை பயன்படுத்தி, நன்றாக பந்தின் அடியில் பேட்டை செலுத்தி, லெக் ஸ்லிப் திசையில் முழு கட்டுப்பாட்டுடன் பந்தை ஸ்வீப் செய்கிறார்."
"மேலும், சோயிப் பஷீர் பந்துவீசியபோது, சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் தொடர்ந்து இந்தியில் பேசிக்கொண்டே இருந்தனர். அவர்கள் ஏதோ ஒரு விஷயத்தைப் பேசவில்லை. இப்படிப் பேசுவதன் மூலம் பந்துவீச்சாளரை குழப்பமடைய செய்யலாம் என்பதற்காகவே இவ்வாறு செய்கிறார்கள். இதெல்லாம் ஸ்கோர்போர்டில் நம்மால் பார்க்க முடியாது. அதை தாண்டிய விளையாட்டு நுணுக்கங்கள்" என சுட்டிக்காட்டி சச்சின் டெண்டுல்கர் பாராட்டியிருக்கிறார். சுப்மன் கில்லுடன் அடிக்கடி ரிஷப் பண்ட் பேசிக்கொண்டே இருந்தார் என்பதைத்தான் சச்சின் டெண்டுல்கர் இந்த இடத்தில் சுட்டிக்காட்டி பாராட்டியிருக்கிறார்.
இதன் மூலம், ரிஷப் பண்ட் விளையாட்டுத்தனமாக ஆடுகிறார், ஏனோதானோ என ஷாட்கள் அடிக்கிறார் என்ற விமர்சனத்திற்கு சச்சின் டெண்டுல்கர் பதிலளித்திருப்பதாகவே தெரிகிறது. ரிஷப் பண்ட் பொறுப்புடன் இருப்பதைத்தான் சச்சின் டெண்டுல்கர் இவ்வாறு கூறியிருக்கிறார்.