மும்பை: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முடிவை பற்றி விவாதிக்க பிசிசிஐ கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் பங்கேற்றனர். பிசிசிஐ-யின் புதிய செயலாளர் தேவஜித் சைகியா மற்றும் சிலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக இனி இந்திய டெஸ்ட் அணியில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி இனி ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் டெஸ்ட் அணியில் இடம் பெற விரும்பினால் நிச்சயமாக அவர்கள் ரஞ்சி டிராபி தொடரில் ஒரு சில போட்டிகளிலாவது விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கேரியர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.
ஆனால், விராட் கோலி இந்த முடிவை ஏற்று உள்ளூர் போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் உள்ளது. இது மட்டும் இன்றி இந்தக் கூட்டத்தில் மற்றொரு முக்கிய விஷயத்தையும் பிசிசிஐ அறிவுறுத்தி இருக்கிறது. அதாவது இனி இந்திய அணியில் எந்த வீரரும் இருதரப்பு தொடர்களின் போது தாங்களாக விடுப்பு எடுத்துக் கொள்வதாக கூற முடியாது.
எந்தெந்த தொடர்களில் விளையாடுகிறோம், எந்தெந்த தொடர்களில் விளையாடவில்லை என்ற முடிவை இனி தனிப்பட்ட முறையில் எந்த ஒரு வீரரும் எடுக்க முடியாது என கூறப்பட்டு இருக்கிறது. இதற்கு முந்தைய சில ஆண்டுகளில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சில இருதரப்பு தொடர்களில் ஆட மறுத்து, விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
ஆனால், இனியும் அதுபோல எந்த ஒரு வீரரும் குறிப்பிட்ட தொடரிலிருந்து விடுப்பு எடுத்துக் கொள்ள முடியாது. அந்த முடிவு தேர்வு குழுவின் கைகளில் தான் இருக்கும். அவர்கள் தான் ஒரு வீரருக்கு ஓய்வு அளிக்கலாமா? வேண்டாமா? என்ற முடிவை எடுப்பார்கள் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதன் மூலம் இந்திய அணியின் கட்டுப்பாடு முற்றிலுமாக தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வசம் வந்து இருக்கிறது. இனி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் மூத்த வீரர் விராட் கோலியின் ஆதிக்கம் இந்திய அணியில் வெகுவாக குறையும். அவர்கள் இனி தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.