தரம்சாலா : இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் கிராலி கொடுத்த கேட்சை சர்பராஸ் கான் பிடித்த போதும், ரோகித் சர்மா டிஆர்எஸ் எடுக்க மறுத்ததால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால், இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி தரப்பில் கிராலி - பென் டக்கெட் கூட்டணி தொடக்க வீர்ரர்களாக களமிறங்கியது.

இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில், குல்தீப் யாதவ் வீசிய பந்தில் பென் டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 16 மீட்டர் தூரம் ஓடி சென்று சுப்மன் கில் அசாத்தியமான கேட்சை பிடித்து அசத்தினார். இருப்பினும் அதிரடியாக ஆடிய ஜாக் கிராலி அரைசதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்து அணி 100 ரன்களை எடுத்த நிலையில், குல்தீப் யாதவ் வீசிய பந்தில் போப் பவுண்டரி அடிக்க முயன்று க்ரீஸில் இருந்து நடந்து வந்தார்.
ஆனால் பந்து அவரை ஏமாற்றியது. இதனால் துருவ் ஜுரெல்லின் அபார ஸ்டம்பிங்கால் போப் 11 ரன்களில் ஆட்டமிழக்க, உணவு இடைவேளை வழங்கப்பட்டது. பின்னர் வந்த குல்தீப் யாதவ் 26வது ஓவரை தொடர்ந்தார். அந்த ஓவரின் 5வது பந்திலேயே குல்தீப் யாதவ் வீசிய பந்து ஜாக் கிராலியின் பேட்டில் அடித்து எட்ஜாகியது. அதனை லாவகமாக பிடித்த சர்பராஸ் கான் அவுட் என்று முறையிட்டார். ஆனால் கள நடுவர் அவுட் கொடுக்கவில்லை.
தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவிடன் டிஆர்எஸ் எடுக்குமாறு முறையிட்டார். அவருக்கு ஆதரவாக சுப்மன் கில்லும் முறையிட, களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சர்பராஸ் கானுக்கு எதிராக துருவ் ஜுரெல் கருத்து கூறியதால், ரோகித் சர்மா டிஆர்எஸ் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தார். ஆனால் ரீ-பிளேவில் கிராலி பேட்டில் பந்து அடித்தது தெரிய வந்தது. இதனை பார்த்த ரோகித் சர்மா, சர்பராஸ் கான் பார்த்து சிரித்து கொண்டே தலையாட்டினார்.
கடந்த போட்டியின் போது சர்பராஸ் கான் தரப்பில் டிஆர்எஸ் எடுக்குமாறு ரோகித் சர்மாவிடம் முறையிட்ட போது, நம்பிக்கை வைத்து எடுத்தார். ஆனால் இம்முறை சர்பராஸ் கானை நம்பாமல் டிஆர்எஸ் எடுக்கவில்லை. இதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் ஜாக் கிராலி 79 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால் இந்திய அணி ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பியது.