அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. கடந்த ஆறு மாதமாக கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் சர்மா ரன்கள் சேர்க்க முடியாமல் தடுமாறி வந்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொத்தமாகவே ரோகித் சர்மா 91 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொத்தமாகவே 31 ரன்களும் தான் ரோகித் சர்மா அடித்திருந்தார். இதனால் ரோகித் சர்மா மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

இந்த சூழலில் கடந்த ஆறாம் தேதி நாக்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா இரண்டு ரன்களில் வெளியேறினார். இதனால் ரோகித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் கேரியர் முடிந்துவிட்டது என்று ரசிகர்கள் கருதினர். இந்த சூழலில் தான் கட்டாக்கில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 119 ரன்கள் குவித்தார்.
பழைய ரோகித் சர்மாவை பார்த்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் துள்ளி குதித்தனர். சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு ரோகித் சர்மா ஃபார்முக்கு திரும்பி இருப்பது இந்திய அணிக்கு பலமாக கருதப்பட்டது. இந்த சூழலில் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதிலும் ரோகித் சர்மா பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோகித் சர்மா ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். மார்க் வுட் வீசிய பந்தை அடிக்க முற்பட்டபோது அது விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. இதனால் ரோகித் சர்மா சதம் அடித்து விட்டு மீண்டும் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்திருப்பது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.
எனினும் மார்க் வுட் வீசிய பந்து மிகவும் அபாயகரமானது என்றும், நல்ல பந்தில் தான் ரோகித் சர்மா ஆட்டம் இழந்து இருப்பதாகவும், கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது போன்ற பந்தை எதிர்கொள்வது என்பது அதிர்ஷ்டம் இல்லாததுதான் என்றும் பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.