கயானா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்து அணியும் வியாழக்கிழமை இரவு பலப் பரிட்சை நடத்துகிறது. இந்த போட்டியில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியும் தோல்வியை சந்திக்காத இந்தியா அணியும் நாக் அவுட் சுற்றில் மோதுவதால் இந்த ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் ரோகித் சர்மா, அரையிறுதி குறித்து நாங்கள் பெரிய அளவில் யோசிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

நாங்கள் இதை ஒரு சாதாரண போட்டியாக தான் கருதுகிறோம். இது போன்ற நாக் அவுட் போட்டிகளில் நீங்கள் மிகவும் யோசித்தால் நிச்சயமாக அது உதவிகரமாக அமையாது. 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்திடம் தோற்றோம். ஆனால் அதன் பிறகு நாங்கள் பெரிய அளவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை.
எப்போதும் போல் அறிவை பயன்படுத்தி சரியான முடிவை களத்தில் எடுத்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். இது போன்ற முக்கியமான போட்டிகளில் அமைதியாக இருக்க வேண்டும். களத்தில் நிதானமாக இருப்பதன் மூலம் நான் பல்வேறு விஷயங்களை சாதித்து இருக்கின்றேன். அது மட்டும் இல்லாமல் பெரும்பான்மையான போட்டிகளில் நாங்கள் அழுத்தத்துடன் தான் விளையாடுகிறோம்.
இது ஒட்டுமொத்த வீரர்களுக்கும் பழகி போய்விட்டது. இந்தியா நாளை நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுமா என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு முதலில் ஆடுகளத்தை பார்த்த பிறகு தான் அது குறித்து யோசனை செய்வோம் என்று ரோகித் கூறினார். இதைப் போன்று அரையிறுதி எங்கு விளையாடப் போகிறோம் என்ற இடம் முன்பே தெரிந்தது உங்களுக்கு சாதகத்தை தானே கொடுத்தது என்று கேட்கப்பட்டதற்கு எங்களுக்கு சாதகம் இல்லை பாதகங்கள் தான் நிறைய இருக்கிறது என்று ரோகித் சர்மா பதில் அளித்திருக்கிறார்.
மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் எங்களுக்கு ரிசர்வ் டே கிடையாது. மழை பெய்தால் 7 மணி நேரம் வரை போட்டி தாமதமாக தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை போட்டி தாமதமாக முடிந்து நாங்கள் வெற்றி பெற்றால் நாங்கள் மீண்டும் பார்படாஸ் செல்வதற்கு எங்களுக்கு விமானம் இருக்காது. இதனால் ஐசிசிக்கு தான் தலைவலி. இதே போல் கயானாவில் நாங்கள் இந்த தொடரில் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. ஆனால் இங்கிலாந்து அணி விளையாடியிருக்கிறது. இதனால் களம் எப்படி செயல்படும் என்று அவர்களுக்கு தெரியும் என்று மோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.