கயானா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி யாருமே எதிர்பார்க்காத அளவில் சிறப்பாக செயல்பட்டு ஒரு போட்டியில் கூட தோற்காமல் பைனலுக்கு சென்று இருக்கிறது. அரை இறுதியில் கூட பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை சுக்கு நூறாக உடைத்து 103 ரன்களில் சுருட்டியது.
இந்திய அணியின் செயல்பாடு மிகவும் பிரம்மிக்கத்தக்க வகையில் இருந்தாலும், விராட் கோலி தொடர்ந்து சொதப்புவது ரசிகர்களுக்கு ஒரு குறையாகவே இருக்கிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கும் விராட் கோலி நடப்பு தொடரில் வெறும் 7 போட்டிகளில் விளையாடி 75 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார்.

குறிப்பாக அரையிறுதி போன்ற ஆட்டத்தில் விராட் கோலி எப்போதுமே சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அவர் ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இதனால் விராட் கோலிக்கு வழங்கப்படும் தொடக்க இடம் பாதிக்கப்படுமா? இல்லை அவர் மூன்றாவது இடத்திற்கு மாற்றப்படுவாரா? இடம் கிடைக்காமல் போகுமா என பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மாவிடம் விராட் கோலி தொடர்பாக கேட்கப்பட்டது. ஆனால் அவர் ஒரு மாஸ் ஆன பதிலை அளித்திருக்கிறார். இதில் என்ன பேசி இருக்கிறார் என்று தற்போது பார்க்கலாம். விராட் கோலி எவ்வளவு கிளாஸ் ஆன வீரர் என்று நாங்கள் கண்டிப்பாக அறிவோம். 15 ஆண்டுகளாக விராட் கோலி இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார்.
இதனால் கோலி பார்மில் இருக்கிறாரா இல்லையா என்பதெல்லாம் ஒரு பிரச்சனையே எங்களுக்கு கிடையாது. விராட் கோலி தாம் அடிக்க வேண்டிய ரன்களை இறுதிப் போட்டிக்காக சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறார் என்று நான் கருதுகிறேன். எங்கள் அணியில் எந்த ஒரு பதற்றமும் இல்லை. நாங்கள் அனைவரும் நிதானமாக இருக்கின்றோம்.
இறுதிப்போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்று நம்பிக்கை இருக்கிறது என்று ரோகித் சர்மா பேசி இருக்கிறார். விராட் கோலி இந்த தொடரில் ஒரு முறை கூட அரை சதம் அடிக்காத நிலையில் அவர் இறுதிப் போட்டியில் பெரிய ரன் அடிப்பார் என்று கேப்டன் ரோகித் சர்மா பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. ரோகித் போல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும், விராட் கோலி பைனலில் தமது திறமையை காட்டுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.