கயானா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தி இருக்கிறது. அரையிறுதியில் பலம் வாய்ந்த நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இது குறித்து பேசிய ரோகித் சர்மா பதற்றமில்லாமல் விளையாடியது வெற்றிக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து பேசிய அவர் இந்த வெற்றி மிகவும் திருப்தி அளிக்கிறது. ஒரே அணியாக நாங்கள் கடுமையாக பயிற்சி செய்து வருகிறோம்.

எங்கள் வீரர்கள் அனைவரும் கடுமையாக செயலாற்றி வருகிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் இல் ஒவ்வொரு ஆடுகளமும் ஒவ்வொரு விதமாக செயல்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் நாங்கள் எங்களை மாற்றிக் கொள்கிறோம். ஆடுகளத்தின் தன்மை கடும் சவால்களை அளிக்கிறது. இதனை சமாளித்து நாங்கள் விளையாடுகின்றோம்.
இதுதான் எங்கள் அணியின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. பவுலர்களும் பேட்ஸ்மேன்களும் களத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் 140 -150 ரன்கள் அடித்தால் அதை தற்காத்து வெற்றிக்கு போராடலாம் என்று நினைத்தேன். எனினும் நானும் சூரிய குமார் யாதவும் நடுவரிசையில் பார்ட்னர்ஷிப் அமைத்ததன் மூலம் கூடுதலாக 25 ரன்கள் கிடைத்தது.
எனினும் இந்த இலக்கை தான் எட்ட வேண்டும் என்று எனக்கு மனதில் எப்போதுமே தோன்றும். ஆனால் நான் அதனை மற்ற பேட்ஸ்மேன்களிடம் திணிக்க மாட்டேன். ஏனென்றால் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களுக்கும் எந்த இலக்கு சரியானது என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே அவர்கள் இது குறித்து முடிவு எடுக்கட்டும் என்று நான் முழு சுதந்திரம் அளிப்பேன்.
இறுதிப்போட்டி என்பது மிகவும் மிகப்பெரிய தருணமாகும். எனினும் இது குறித்து நாங்கள் ஓவராக சிந்திக்காமல், அந்தப் போட்டியில் குறித்து கவனம் செலுத்தி சரியான முடிவுகளை நாங்கள் எடுக்க வேண்டும். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்த போதும், எந்த பதற்றமும் அடையாமல் சரியாக விளையாடினோம் என்று நினைக்கிறேன்.
இதுதான் வெற்றிக்கு முக்கிய காரணம். 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு நாங்கள் ஐசிசி தொடரை வெல்லவில்லை. எனினும் இறுதிப் போட்டியில் நாங்கள் எங்களுடைய சிறந்த செயல்பாடு வெளிப்படுத்துவோம். அணியும் நல்ல ஒரு நிலையில் இருக்கின்றது. நிச்சயமாக இறுதிப்போட்டியில் நாங்கள் நன்றாக விளையாடுவோம் என்று நம்பிக்கை இருக்கிறது என்று ரோகித் சர்மா கூறினார்.