ராஞ்சி : 2019ஆம் ஆண்டு ராஞ்சி மைதானத்தில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இரட்டை சதத்தை விளாசியுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வென்றன. இதனால் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இதனால் 4வது டெஸ்ட் போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஞ்சி மைதானத்தில் 4வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான பும்ரா மற்றும் காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுல் விளையாட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு ராஞ்சி மைதானம் ராசியான மைதானம் என்று தெரிய வந்துள்ளது. டெஸ்ட் தொடரில் 2013ஆம் ஆண்டிலேயே ரோகித் சர்மா அறிமுகமானாலும், 2019ஆம் ஆண்டு தான் அவருக்கு மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது. ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களமிறக்க விராட் கோலி முடிவெடுத்தார்.
அதற்காக சொந்த மண்ணில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் தேர்வு செய்யப்பட்டது. அந்த தொடரில் ரோகித் சர்மா மொத்தமாக 529 ரன்களை விளாசி தொடர் நாயகன் விருதை வென்றார். அந்த தொடரின் 3வது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் ரோகித் சர்மா இரட்டை சதம் விளாசி அசத்தினார்.
255 பந்துகளில் 28 பவுண்டரி, 6 சிக்ஸ் உட்பட 212 ரன்கள் குவித்தார். தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக மீண்டும் ரோகித் சர்மா தனது ராசியான மைதானத்தில் விளையாடவுள்ளார். கடந்த போட்டியிலேயே சதம் விளாசி அசத்திய ரோகித் சர்மா, இந்த போட்டியிலும் பேட்டிங் ஃபார்மை தொடர்வார் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த டெஸ்ட் போட்டியில் 23 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமையை பெறுவார்.