ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கான காரணம் குறித்து கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் 557 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி வெறும் 122 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் சதமும், மொத்தமாக 7 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா அபார வெற்றியை பெற்றார். இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், 2வது நாளில் இங்கிலாந்து அணி 207 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், அவர்களின் கைகள் ஓங்கியிருந்தது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் என்பது 2 அல்லது 3 நாட்களில் முடிவதில்லை. 5 நாட்களில் விளையாடுவதன் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்துள்ளோம்.
2வது நாளில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி, எங்களை அழுத்தத்திற்கு தள்ளியது. ஆனால் இந்திய பவுலர்களிடம் கிளாஸ் இருக்கிறது. அனைவரும் நிதானமாக இருங்கள் என்பதே மெசேஜாக இருந்தது. அதன்பின் 3வது நாளில் எங்களின் கம்பேக் எப்படி இருந்தது என்பதை நினைத்தால் பெருமையாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தான் கொண்டாட்டமாக இருக்கும்.
ஜடேஜாவை 5வது வீரராக களமிறங்கிய முடிவிற்கு பின் அவரின் அனுபவம் தான் காரணம். ஏனென்றால் அந்த நேரத்தில் வலது - இடது காம்போ, எதிரணி பவுலர்கள், சூழல் என்று அனைத்தையும் கணக்கில் கொண்டு தான் முடிவு செய்தோம். சர்பராஸ் கானுக்கு முதல் போட்டி என்பதால், அவருக்கு சில நேரம் தேவை என்று நினைத்தோம். தற்போது அவர் பேட்டிங்கில் என்ன செய்வார் என்பதை பார்த்துவிட்டோம். ஜடேஜாவை 5வது வரிசையில் களமிறக்கியதற்கு பின் எந்த நீண்ட நாள் திட்டமும் இல்லை. அந்த சூழலில் எடுக்கப்பட்ட முடிவு தான்.
இந்த போட்டியில் வெல்வதற்கு பின் பல்வேறு திருப்புமுனைகள் இருந்தது. இந்திய மண்ணில் டாஸை வெல்வது எவ்வளவு முக்கியம் என்று அனைவருக்கும் தெரியும். அதேபோல் எங்கள் அணியில் அதிக அனுபவம் கொண்ட பவுலர் இல்லாமல், சிறப்பாக பவுலிங் செய்துள்ளோம். பேட்டிங் முடிவடைந்த பின் எங்களுக்கு பாதி வேலை முடிந்தது என்று புரிந்தது. 2 இளம் வீரர்களும் எங்களுக்கு தேவையான முன்னிலையை பெற்று கொடுத்தார்கள்.
அதேபோல் ஜடேஜா 2வது இன்னிங்ஸில் மிரட்டலான பவுலிங்கை செய்துள்ளார். ஜெய்ஸ்வால் பற்றி விசாகப்பட்டினத்திலேயே பேசிவிட்டேன். அவரை பற்றி வெளியிலும் அதிகமாக பேசுகிறார்கள். அதனால் அதிகமாக பேச விரும்பவில்லை. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை உச்ச நிலையில் இருந்து தொடங்கியுள்ளார். அவர் இதனை தொடர வேண்டும். நிச்சயம் மிகச்சிறந்த வீரர் என்று தெரிவித்துள்ளார்.