மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா இரண்டு ரன்கள் ஆட்டம் இழந்தது ரசிகர்களை எரிச்சல் அடைய செய்திருக்கிறது. இதன் மூலம் கேப்டன் ரோஹித் சர்மா, கடந்த ஆறு மாதங்களாக ஒரு முறை கூட பெரிய ஸ்கோர் அடிக்காமல் ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்.
இதன் காரணமாக ரோகித் சர்மா தன்னுடைய கடைசி கிரிக்கெட் அத்தியாயத்தில் இருப்பதாகவும், இனி அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சில கிரிக்கெட் விமர்சனங்கள் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தான் தடுமாறினார் என்றும், ஒருநாள் போட்டிகளில் அவர் தன்னுடைய பார்மை நிரூபிப்பார் என்றும் கருத்து தெரிவித்தனர். ஆனால் கேப்டன் ரோகித் சர்மா முதலிடத்திற்கு ஒரு நாள் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்திருப்பது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர், "ரோகித் சர்மா ஆட்டம் இழந்த முறை அனைவருக்கும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கின்றது. நிச்சயம் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. 50 ஓவர் போட்டிகளில் ரோகித் சர்மா போன்ற ஒரு வீரர் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் ஆட்டம் இழக்கிறார் என்றால் அவருக்கு நிச்சயம் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்".
"ஏனென்றால் நான் அப்போதிலிருந்து கூறி வருவது இது ஒன்றுதான். எந்த ஒரு வீரரும் ஃபார்முக்கு வரவேண்டும் என்றால், அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். நீங்கள் பேட்டிங்கில் டாப் வரிசையில் முதல் மூன்று இடத்தில் விளையாடுகிறீர்கள் என்றால் நிச்சயமாக நீங்கள் ரன்கள் சேர்க்க வேண்டும்".
"ரோகித் சர்மா தன்னுடைய சிறந்த ஆட்டத்தை சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வெளிப்படுத்தவில்லை என்றால், நிச்சயம் அவருக்கு பிரச்சனைகள் காத்திருக்கிறது" என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்காத விராட் கோலி இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவார் என செய்திகள் வெளியாகி உள்ளது.