மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கால் உடைந்த நிலையிலும் களத்திற்கு மீண்டும் வந்து அரைசதம் அடித்தது ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருக்கிறது.
பண்ட் களத்திற்கு வந்தவுடன் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மைதானத்தில் எழுந்து நின்று பாராட்டினர். அது மட்டும் இல்லாமல் பண்ட் ரன்களை ஓட முடியாமல் பந்தை நீண்ட தூரம் அடித்து விட்டு நடந்து சென்று ரன்களை சேர்த்தார்.

மேலும் எளிமையான பந்துகளை பவுண்டரிக்கும் சிக்சருக்கும் அடித்து ரன்களை சேர்த்தார்.இதன் மூலம் ரிஷப் பன்ட் தன்னுடைய அரைசதத்தை பூர்த்தி செய்தார். பண்ட் அடித்த ஒவ்வொரு ரன்களும் இந்திய அணிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும் தோற்றாலும் இந்த மன உறுதி ரசிகர்கள் மத்தியில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
இதனிடையே ரிஷப் பண்டை பாராட்டி சமூக வலைத்தளத்தில் சச்சின் டெண்டுல்கர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் மன உறுதி என்பது வலியை தாங்கிக் கொண்டு அதை மீறி எழுவது பற்றியது. ரிஷப் பண்ட் காயம் அடைந்த பிறகும் வலியை பொருட்படுத்திக் கொண்டு களத்திற்கு திரும்பி தன்னுடைய போர்க்கணத்தை காட்டிருக்கின்றார்.
அதுவும் வலியுடன் இப்படிப்பட்ட ஒரு செயல்பாட்டை அவர் வெளிக்காட்டியது மிகவும் பாராட்டத்தக்கது. நாட்டுக்காக விளையாட வேண்டும் என்றால் எத்தகைய மன உறுதி மற்றும் உத்வேகம் வேண்டும் என்பதை பண்டின் இந்த அரை சதம் ஒரு நினைவூட்டலாக பலருக்கும் இருந்திருக்கும்.
இது ஒரு துணிச்சலான செயல்பாடு பண்டின் இந்த ஒரு இன்னிங்ஸ் காலம் முழுவதும் நிலைத்து நிற்கும். சிறப்பாக விளையாடி இருக்கிறீர்கள் பண்ட் என்று சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். ரிஷப் பண்ட் களத்திற்கு திரும்பி பேட்டிங் செய்ததை தம்மால் நம்ப முடியவில்லை என்று தினேஷ் கார்த்திக் பாராட்டி உள்ளார்.
இதுபோன்று இங்கிலாந்து வீரர் மைக்கேல் ஆத்தர்ட்டன், இது உண்மையிலேயே மிகச் சிறந்த தருணம் என்று பாராட்டிருக்கின்றார் இதே போன்று ரிக்கி பாண்டிங் பாராட்டுகையில், கிரிக்கெட் விளையாட கால் வேண்டும் என்று யார் சொன்னது என்று பாராட்டியுள்ளார்.