லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையிலான நடைபெற்ற வரும் ஆண்டர்சன் டெண்டுல்கர் தொடர் தற்போது முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறது. மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த சூழலில் இந்திய அணி இந்த தொடரை வெல்ல வேண்டும் என்றால் கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும். லண்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் 193 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி 170 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

ஜடேஜா மட்டும் தனி ஆளாக நின்று கடுமையாக போராடினார். அவருக்கு பும்ரா, சிராஜ் ஆகியோர் நல்ல கம்பெனி கொடுத்தனர். எனினும் இந்திய அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சச்சின்," நாம் வெற்றியின் அருகே வரை வந்து விட்டோம். ஆனாலும் வெற்றி தூரமாக மாறிவிட்டது."
"ஜடேஜா, பும்ரா, சிராஜ் ஆகியோர் கடுமையாக போராடி கடைசிவரை வெற்றிக்காக போராடினார்கள். இந்திய அணி வெற்றிக்காக சிறப்பான முயற்சியை எடுத்திருக்கின்றது. இதே போல் இங்கிலாந்து அணியும் நமக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக சிறப்பாக செயல்பட்டார்கள். இதன் மூலம் அவர்கள் ஆசைப்பட்ட முடிவு கிடைத்துவிட்டது. கடுமையாக போராடி வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள்" என்று சச்சின் தன்னுடைய ஏமாற்றத்தை பதிவு செய்திருக்கின்றார்.
இதேபோன்று இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே நமது வீரர்கள் கடைசிவரை சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்காக போராடினார்கள். இந்த டெஸ்ட் போட்டி எனக்கு 1999 ஆம் ஆண்டு சென்னையில் பாகிஸ்தானுக்கு எதிராக அடைந்த தோல்வியை நினைவு படுத்தியது.
சிராஜ் போல் தான் கடைசி விக்கெட்டும் விழுந்தது. அதில் நாங்கள் இன்னும் குறைவான ரன்களில் தோற்றோம். தற்போது அதேபோல் ஒரு தோல்வியை தற்போது இங்கு பெற்று இருக்கின்றோம். எனினும் நமது வீரர்களின் போராட்ட குணத்திற்கு வாழ்த்துக்கள் என்று அவர் கூறியிருக்கின்றார்.