மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்ற துருவ் ஜுரெல் குறித்து இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலமாக 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 17வது டெஸ்ட் தொடரை தொடர்ச்சியாக சொந்த மண்ணில் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.

192 என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 120 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த சுப்மன் கில் - துருவ் ஜுரெல் கூட்டணி அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற வைத்தனர். அதேபோல் 2013ஆம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக 150க்கும் அதிக ரன்களை இந்திய அணி வெற்றிகரமாக சேஸ் செய்தது அசத்தியுள்ளது.
விராட் கோலி, முகமது ஷமி, பும்ரா, கேஎல் ராகுல் ஆகியோர் இல்லாமலேயே இந்திய அணி சொந்த மண்ணில் வெற்றியை பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் 90 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழக்காமல் 39 ரன்களும் சேர்த்த துருவ் ஜுரெல் இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இந்த நிலையில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், கடினமான சூழலில் இருந்து கம்பேக் கொடுத்து இந்திய அணி வெற்றியை பெற்றுள்ளது. இந்திய வீரர்களின் பிடிவாத குணத்தையும், மன உறுதியையும் இந்த வெற்றி காட்டியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த முதல் ஸ்பெல்லை ஆகாஷ் தீப்பின் வீசி இருக்கிறார். இங்கிலாந்து பவுலர்களின் லெந்தை துருவ் ஜுரெல் இரு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக கணித்து விளையாடினார்.
அதுமட்டுமல்லாமல் துருவ் ஜுரெல்லின் கால்பாடம் துல்லியமாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவுடன் இணைந்து அவர் அமைத்த பார்ட்னர்ஷிப் மற்றும் 2வது இன்னிங்ஸ் ஆட்டமே இந்திய அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதேபோல் குல்தீப் யாதவின் 2வது இன்னிங்ஸ் ஸ்பெல் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.
அதேபோல் சீனியர் வீரர்களான அஸ்வின், ஜடேஜா மற்றும் ரோகித் சர்மா அவர்களின் பணியை சிறப்பாக செய்துள்ளார்கள். அதேபோல் சேஸிங்கின் போது உள்ளுணர்வை கட்டுப்படுத்தி தனது பிடிவாத குணத்தை வெளிப்படுத்தி மிகமுக்கிய அரைசதத்தை விளாசி இருக்கிறார் சுப்மன் கில். இந்த போட்டியின் மூலம் தொடரை வென்றது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.