மும்பை: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த வெற்றியை பாராட்டி இருக்கிறார். குறிப்பாக நாக் அவுட் போட்டிகளில் இந்திய வீரர்கள் வெளிப்படுத்திய மன உறுதியை அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் ரன்கள், பார்ட்னர்ஷிப் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் ஆகியவற்றை வைத்துத் தான் ஒரு அணியின் செயல்பாடு கணிக்கப்படும். ஆனால் சச்சின் டெண்டுல்கர் இதையெல்லாம் தாண்டி இந்திய அணியிடம் இருந்த "வெற்றிக்கான முனைப்பு" (Intent) தான் முக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "ரன்கள், பார்ட்னர்ஷிப் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் ஆகியவற்றை நீங்கள் அளவிடலாம். ஆனால் இங்கு உண்மையான புள்ளிவிவரம் என்பது வெற்றிக்கான முனைப்பு தான். பேட்டிங்கில் இந்திய அணி காட்டிய அந்த நேர்மறையான அணுகுமுறையும், பீல்டிங்கில் பதற்றமில்லாமல் செயல்பட்ட விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாக் அவுட் போட்டிகளில் இது போன்ற மனநிலை தான் தேவை," என்று பாராட்டியுள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், முந்தைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வெளிப்படுத்திய அதே அதிரடி ஃபார்மை இந்த அரையிறுதியிலும் தொடர்ந்தார். இது குறித்தும் சச்சின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். "சஞ்சு சாம்சன் தனது சிறப்பான ஃபார்மை இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே அணியின் ரன் வேகத்தை அவர் நிர்ணயித்துவிட்டார். இப்போது அனைவரின் பார்வையும் இறுதிப்போட்டி மீது உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார். சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்து, இந்திய அணி 253 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்ட உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து ஏறக்குறைய 500 ரன்களைக் குவித்தன. பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நிறைந்த இந்த ஆட்டத்தில், இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

"500 ரன்கள் அடிக்கப்பட்ட இந்த போட்டியில், என்னைப் பொறுத்தவரை ஆட்டநாயகன் ஜஸ்பிரித் பும்ரா தான். அவரது எகானமி ரேட் 8.25 ஆக இருந்தது. அவர்தான் இரு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசமாக அமைந்தார்," என்று இர்ஃபான் பதான் ட்வீட் செய்துள்ளார். அதேபோல, இங்கிலாந்து அணிக்கு ஆதரவாக தனி ஆளாகப் போராடி சதம் அடித்த இளம் வீரர் ஜேக்கப் பெத்தேலை, "ஒரு புதிய நட்சத்திரம் உருவாகிவிட்டது" என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் பாராட்டியுள்ளார்.

இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி, வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.