லண்டன்: கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன.இந்த போட்டிக்கு பல பிரபலங்கள் நேரில் வந்து கண்டுக்களித்தனர்.
இதில் கிரிக்கெட்டில் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு இரண்டு மிகப்பெரிய கௌரவம் கிடைத்தது. அதாவது இந்த போட்டியை தொடங்கும் விதமாக மைதானத்தில் இருக்கும் மணியை அசைத்து போட்டியை தொடங்குவார்கள்.

மிகப்பெரிய சாதனைகளை படைத்தவர்களுக்கு தான் இந்த வாய்ப்பு வழங்கப்படும். அந்த வகையில் சச்சின் டெண்டுல்கருக்கு இந்த வாய்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதனை சச்சின் டெண்டுல்கர் லார்ட்ஸ் மைதானத்திற்கு வந்து அந்த மணியை அசைத்த உடன் ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி அவரை வரவேற்றனர்.
இந்த டெஸ்ட் போட்டியே தற்போது டெண்டுல்கர் ஆண்டர்சன் பெயரில் தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரிய கௌரவம் ஒன்று கிடைத்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் தொடர்பான அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது.
இதில் சச்சின் டெண்டுல்கரின் உருவப்படம் தற்போது திறக்கப்பட்டிருக்கிறது. இந்த உருவப்படத்தை திறந்த சச்சின் அதன் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சச்சின், நான் 1988 ஆம் ஆண்டு முதல் முறையாக லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு சிறுவனாக வந்தேன்.
மீண்டும் 1989 ஆம் ஆண்டு ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணியில் விளையாடுவதற்காக வீரராக வந்தேன். அப்போது லார்ட்ஸ் மைதான கேலரியில் நின்று அதன் பாரம்பரியம் அங்கு இருந்த வரலாற்றுச் சின்னங்களையும் பார்த்து மூழ்கினேன். இந்த வரலாற்றில் நாமும் இடம் பெறுவோமா என்ற கனவு கண்டேன்.
ஆனால் தற்போது அதே இடத்தில் என்னுடைய புகைப்படம் திறக்கப்பட்டு இருப்பதை நினைத்தால் வார்த்தைகளால் அதனை வர்ணிக்க முடியாது. வாழ்க்கை எனக்கு ஒரு முழு வட்டமாக நிறைவேறி இருக்கிறது. இதற்காக நான் என்றும் நன்றியுணர்வுடன் இருப்பேன். நிச்சயமாக இது சிறந்த நினைவுகளில் ஒன்றாக இருக்கும் என்று சச்சின் கூறியுள்ளார்.