மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி சிறப்பாக விளையாடி டிரா செய்ததற்கு, முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், 1990ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரை நினைவு கூர்ந்து, அதேபோன்ற ஒரு சம்பவம் இப்போதும் நடந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அது சச்சினின் முதல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல். ராகுல் (90 ரன்கள்), சுப்மன் கில் (103 ரன்கள்) சிறப்பாக பேட்டிங் செய்தனர். ரவீந்திர ஜடேஜா (107 ரன்கள்) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (101 ரன்கள்) ஆகியோர் ஆட்டமிழக்காமல் இருந்து, இந்திய அணி போட்டியை டிரா செய்ய உதவினர்.

இந்தப் போட்டி நடைபெற்ற ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில், 1990ஆம் ஆண்டிலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. அப்போது, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இருந்தது. இரண்டாவது போட்டி இதே ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் டிரா ஆனது. அப்போது சச்சின் டெண்டுல்கர் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்து இந்திய அணி போட்டியை டிரா செய்ய உதவினார். அதனால், அந்தத் தொடர் யாருக்கு என்ற பரபரப்பு இறுதிப் போட்டி வரை நீடித்தது.
அதேபோல, இப்போதும் நடந்துள்ளது. இந்த முறை முதல் மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி இரண்டு வெற்றிகளையும், இந்திய அணி ஒரு வெற்றியையும் பெற்றிருந்தன. இந்த நிலையில், நான்காவது போட்டி ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று டிராவில் முடிவடைந்தது. இதனால், இந்தத் தொடரின் வெற்றியாளர் யார் என்பது ஐந்தாவது போட்டியில் தான் தெரியவரும்.
இதைப் பற்றித்தான் சச்சின் டெண்டுல்கர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். சச்சின் வெளியிட்டுள்ள பதிவு: "இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஆடும் டெஸ்ட் போட்டி என்றால், ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானம் எப்போதும் தொடரை முடிவுக்குக் கொண்டுவராமல் உயிரோடு வைத்திருக்கும். இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்திற்கு எனது வாழ்த்துகள். கே.எல். ராகுல், சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் போராடும் குணத்தை வெளிப்படுத்தினார்கள். ஐந்தாவது போட்டிக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.