தரம்சாலா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர் ஆண்டர்சனின் சாதனையை இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் அனுபவ வீரரான ஆண்டர்சன் பவுலிங்கில் இந்திய அணியின் குல்தீப் யாதவ் 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆண்டர்சன் படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே ஆகிய 2 ஸ்பின்னர்கள் மட்டுமே 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதன் மூலம் 142 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆண்டர்சன் தொடங்கி வைத்துள்ளார்.
2003ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஆண்டர்சன், 21 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து விளையாடி வருகிறார். 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர் விளையாடுவதே மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படும் சூழலில், 21 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடிய ஆண்டர்சன் சாதனை ரசிகர்களுக்கு வியப்பை அளித்துள்ளது.
இதனால் ஆண்டர்சன் 700வது விக்கெட்டை வீழ்த்திய பின் இந்திய ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை அளித்தனர். ஆண்டர்சனின் இந்த சாதனையை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆஸ்திரேலியாவில் தான் முதல்முறையாக ஆண்டர்சனை கவனித்தேன். அவர் கைகளில் பந்தை கட்டுப்படுத்தியது ஸ்பெஷலாக இருந்தது.