லீட்ஸ்: சச்சின் டெண்டுல்கர், சுப்மன் கில் தலைமையிலான புதிய இந்திய டெஸ்ட் அணிக்கு சில யோசனைகளைத் தெரிவித்தார். அப்போது இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா மட்டுமில்லாமல் மற்றொரு ஜாம்பவானான ரவிச்சந்திரன் அஸ்வினும் இல்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார். பலரும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பற்றி பேசி வருவதாகவும், அஸ்வினும் அவர்களுக்கு இணையானவர் என்பதை அவர் அறிவுறுத்தினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. இதுவே 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் முதல் டெஸ்ட் தொடராக அமைந்திருக்கிறது. இந்தத் தொடரில் இந்திய அணி ஒரு புதிய பாதையில் அடியெடுத்து வைக்கிறது.

அனுபவ வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இல்லாத இந்திய அணி இனி விளையாட உள்ளது. சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டி இன்று ஜூன் 20, வெள்ளிக்கிழமை அன்று துவங்குகிறது.
இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கர் இந்தச் சூழல் குறித்துப் பேசினார். "இது இந்திய கிரிக்கெட்டுக்கு மாற்றத்திற்கான நேரம். இளம் வீரர்கள் அதிக அளவில் வந்துள்ளனர். புத்துணர்ச்சியுடன் இருக்கும் வீரர்கள் முன்னேறிச் செல்ல உள்ளனர். இந்த வீரர்கள் நிச்சயம் இந்தியாவில் அதிக ரசிகர்களை ஈர்ப்பார்கள் என்று நான் உறுதியாகச் சொல்வேன்.
உங்களுக்கு ஊக்கம் அளிப்பதற்கு சில சாதனையாளர்கள் தேவை. அந்த வகையில், நிச்சயம் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் அஸ்வின் ஆகியோர் இல்லாமல் உங்களால் அதைச் செய்ய முடியாது. மக்கள் பலரும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பற்றி அதிக அளவில் பேசி வருகிறார்கள். ஆனால், ரவிச்சந்திரன் அஸ்வினும் இளம் வீரர்கள் பலருக்கு ஊக்கம் அளிப்பவராக இருக்கிறார்.
அவர்கள் மூவரும் இல்லாமல் ஆடுவது இந்திய அணிக்குச் சவாலான விஷயமாகும். ஆனால், அந்தச் சவாலில் இருந்து இப்போது இருக்கும் இந்திய அணி விலகிச் செல்லாது என எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் இந்தச் சவாலை ஏற்பார்கள். அடுத்த தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருப்பார்கள்" என்று சச்சின் டெண்டுல்கர் கூறி இருக்கிறார்.