மும்பை: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்துவிட்டாலும், அது ஏற்படுத்திய தாக்கம் இன்னும் ஓயவில்லை. குறிப்பாக, நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கை குலுக்க முன்வந்தபோது, அதை நிராகரித்துவிட்டு ரவீந்திர ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் தொடர்ந்து பேட்டிங் செய்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
"கிரிக்கெட் ஸ்பிரிட்" என்ற பெயரில் சிலர் இந்திய வீரர்களை விமர்சிக்க, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தற்போது இந்த விவகாரம் குறித்து தனது மௌனத்தைக் கலைத்துள்ளார். "அவர்கள் ஏன் கை குலுக்க வேண்டும்?" என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ள சச்சின், இந்திய வீரர்களுக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

மான்செஸ்டரில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், இந்திய அணி போட்டியை 'டிரா' செய்வதற்காக கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தது. இங்கிலாந்து அணி வெற்றி பெற வாய்ப்பில்லை என்று தெரிந்ததும், ஆட்டத்தை முடித்துக்கொள்ளும் நோக்கில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பேட்டிங் செய்துகொண்டிருந்த ஜடேஜா மற்றும் சுந்தரை நோக்கி கை குலுக்க வந்தார்.
ஆனால், இருவரும் தங்களது சதத்தை நெருங்கிக் கொண்டிருந்ததாலும், போட்டியை முழுமையாக டிரா செய்வதில் குறியாக இருந்ததாலும், பென் ஸ்டோக்ஸின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு தொடர்ந்து பேட்டிங் செய்தனர். இது மைதானத்தில் ஒருவித தர்மசங்கடமான சூழலை உருவாக்கியது. அப்போது இங்கிலாந்து வீரர்கள் ஜடேஜா, சுந்தரை சீண்டும் வகையில் பேசினர். பகுதி நேர பந்துவீச்சாளரான ஹாரி புரூக்கை பந்து வீச வைத்து விட்டு, "இவருக்கு எதிராகத் தான் நீங்கள் சதம் அடிக்க வேண்டுமா?" என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வெறுப்பை கக்கினார்.
இந்த சர்ச்சை குறித்து வீடியோ ஒன்றில் பேசிய சச்சின் டெண்டுல்கர், பென் ஸ்டோக்ஸின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளார். "வாஷிங்டன் சுந்தரும், ஜடேஜாவும் சதம் அடிக்கப் போராடினார்கள். இதில் எங்கே 'ஸ்பிரிட்' இல்லை? அவர்கள் போட்டியை டிரா செய்வதற்காகத்தான் விளையாடினார்கள். அதற்கு முன்பு, இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கடுமையாகத் தாக்கியபோதும், அதை எல்லாம் சமாளித்து சிறப்பாக பேட்டிங் செய்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்" என்று சச்சின் பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தொடர் 2-1 என்ற நிலையில் உயிர்ப்புடன் இருந்தது. அப்படியிருக்கும்போது, அவர்கள் ஏன் கை குலுக்கிவிட்டு, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கும், பீல்டர்களுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும்? ஹாரி ப்ரூக்கை பந்துவீச வைத்தது பென் ஸ்டோக்ஸின் முடிவு. அது இந்தியாவின் பிரச்சனை இல்லை. என்னைப் பொறுத்தவரை ஜடேஜா - சுந்தர் செய்தது முற்றிலும் சரி" என்று ஆணித்தரமாகக் கூறினார்.
மேலும், "அவர்கள் இருவரும் பேட்டிங் செய்ய வந்தபோது ஹாரி ப்ரூக் பந்துவீசவில்லையே? பிறகு எதற்காக ஐந்தாவது டெஸ்ட்டுக்கு இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும்? இதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? இல்லை!" என்று சச்சின் கோபமாக கேள்வி எழுப்பினார்.
சச்சின் தனது ஆதரவை இந்திய அணிக்கு முழுமையாகத் தெரிவித்தார். "இந்த முடிவை எடுத்த கம்பீராக இருந்தாலும் சரி, சுப்மன் கில்லாக இருந்தாலும் சரி, அல்லது ஜடேஜா, வாஷிங்டன் சுந்தராக இருந்தாலும் சரி, நான் 100 சதவீதம் இந்திய அணியுடன் தான் இருக்கிறேன். கடைசி டெஸ்டில் ரன் குவிக்க வேண்டிய நேரத்தில் சுந்தர் அதைச் சிறப்பாகச் செய்தார் அல்லவா? நான்காவது டெஸ்டில் களத்தில் நிலைத்து நிற்க வேண்டிய தேவை இருந்தபோது, அதைச் செய்தார். ஐந்தாவது டெஸ்டில் அதிரடி காட்ட வேண்டிய தேவை இருந்தபோது அதையும் செய்தார். மிக அருமை," என்று சச்சின் பாராட்டி முடித்தார்.
மொத்தத்தில், "ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்" என்ற பெயரில் இந்திய வீரர்களின் போராட்டத்தைக் குறைத்து மதிப்பிட்டவர்களுக்கு, சச்சின் டெண்டுல்கரின் இந்தக் கருத்து ஒரு சரியான பதிலாக அமைந்துள்ளது.