டெல்லி : இந்திய அணியின் இளம் வீரர் சர்பராஸ் கான் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு சரிபட்டு வரமாட்டார் என்று முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான சர்பராஸ் கான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அறிமுக போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் விளாசி அசத்திய சர்பராஸ் கான், இந்திய டெஸ்ட் அணியில் நிச்சயம் நிரந்தர இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஸ்பின்னர்களை எந்தவித அச்சமுமின்றி வெளுக்கும் சர்பராஸ் கானின் திறமை பலருக்கும் வியப்பை அளித்துள்ளது.

இந்த நிலையில் சர்பராஸ் கானை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பல்வேறு ஐபிஎல் அணிகளும் ஆலோசித்து வருகின்றன. ஐபிஎல் ஏலத்தின் போது சர்பராஸ் கானை வாங்குவதற்கு எந்த அணியும் முன்வரவில்லை. ஏனென்றால் இதுவரை 50 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சர்பராஸ் கான் 585 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். ஆர்சிபி, பஞ்சாப், டெல்லி என்று பல்வேறு அணிகளுக்காக விளையாடியும், சர்பராஸ் கானால் ஐபிஎல் தொடரில் சோபிக்க முடியவில்லை.
இந்த நிலையில் சர்பராஸ் கான் குறித்து டெல்லி அணியின் இயக்குநர் சவுரவ் கங்குலி பேசுகையில், என்னை பொறுத்தவரை சர்பராஸ் கான் ஒரு நல்ல டெஸ்ட் கிரிக்கெட் வீரராக தெரிகிறார். டி20 கிரிக்கெட் வித்தியாசமானது. ரஞ்சி டிராபி தொடரில் சர்பராஸ் கான் ஆயிரக்கணக்கான ரன்களை விளாசி இருக்கிறார். ரஞ்சி டிராபி தொடரில் ரன்கள் அடித்தால், அது நிச்சயம் வீணாகாது. அதுதான் இப்போது சர்பராஸ் கானுக்கு நடந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
சவுரவ் கங்குலியின் கருத்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஆர்சிபி அணிக்காக சில அதிரடி இன்னிங்ஸ்களை சர்பராஸ் கான் சிறு வயதிலேயே விளையாடி இருக்கிறார். தற்போது ஃபிட்னஸ்-லும் தீவிரமாக உழைத்து வரும் சர்பராஸ் கான் டி20 கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதேபோல் இளம் வீரரை ஒருவரை டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் ஆட தகுதியானர் என்று முத்திரை குத்துவது சரியா என்று கங்குலிக்கு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.