மும்பை: 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாகத் தற்போது சமூக வலைத்தளங்களில் இந்திய ரசிகர்கள் பல்வேறு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஆட்டத்தின் போக்கை மாற்றிய பும்ரா முதல், இறுதிப்போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானம் வரை எதையும் விட்டுவைக்காமல் ரசிகர்கள் உருவாக்கியுள்ள சில சுவாரஸ்யமான மீம்ஸ்கள் குறித்து இங்கே காண்போம்.
இந்த அரையிறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே இணையத்தில் ஒரு விசித்திரமான புள்ளிவிவரம் வலம் வந்தது. அதாவது 2007 ஆம் ஆண்டிலிருந்து டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்போதெல்லாம், வெற்றி வாய்ப்பு மாறி மாறி அமைந்திருக்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு இந்திய அணி வெற்றி பெற்றதால், இந்த முறை (2026) இங்கிலாந்து அணிதான் வெற்றி பெறும் எனப் பலரும் ஆரூடம் சொல்லியிருந்தனர்.
இந்தத் தகவலைப் பார்த்துப் பயந்துபோன இந்திய ரசிகர்கள், வடிவேலுவின் பிரபலமான நகைச்சுவைக் காட்சியான "என்னடா ரொம்ப பயமுறுத்துறீங்க" என்ற வசனத்தை வைத்து மீம்ஸ் போட்டிருந்தனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த ராசி பலிக்கவில்லை, இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தித் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா இந்தத் தொடர் முழுவதுமே ஏமாற்றமளித்து வருகிறார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அடித்த அரைசதத்தைத் தவிர்த்து, மற்ற போட்டிகளில் அவர் சோபிக்கவில்லை. நேற்றைய முக்கியமான அரையிறுதியிலும் 7 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் கடுப்பான ரசிகர்கள், ஒரு நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் ராமர் "தங்கதுரை எல்லாம் ஒரு அளவுக்கு தான்" என்று பேசுவதைப் போல மீம்ஸ்களைப் பகிர்ந்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இறுதிப்போட்டியிலாவது அவர் ரன் குவிப்பாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி ஒருகட்டத்தில் மிக எளிதாக வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால் கடைசி 5 ஓவர்களில் ஆட்டத்தின் போக்கே மாறியது. 16 மற்றும் 18வது ஓவர்களை வீசிய பும்ரா, அந்த இரண்டு ஓவர்களிலும் சேர்த்து வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதுதான் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்குக் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தித் தோல்விக்கு வித்திட்டது.
இதனை 'ஆயிரத்தில் ஒருவன்' படக் காட்சியுடன் ரசிகர்கள் ஒப்பிட்டுள்ளனர். அந்தப் படத்தில் சோழ மன்னனாக வரும் பார்த்திபன், "தூதுவன் வருவான்" என்று காத்திருப்பார். அதேபோல, "தூதுவன் வருவான்.. சிக்கனமாக ஓவர் போடுவான்.. நம்மை அகமதாபாத் அழைத்துச் செல்வான்" என்று பும்ராவை அந்தத் தூதுவனோடு ஒப்பிட்டுப் புகழ்ந்து தள்ளியுள்ளனர். பும்ரா என்னும் ஒற்றை மனிதன்தான் இந்திய அணியை இறுதிப்போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இறுதிப்போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. சரியாக ஓராண்டுக்கு முன்பு, அதாவது 2025 மார்ச் 9 அன்று சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இதே இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் இந்தியா வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் மார்ச் 8, 2026 அன்று அதே அணிகள் மோதுகின்றன. இதனை 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் கவுண்டமணியும் கார்த்திக்கும் மீண்டும் சந்தித்துக்கொள்ளும் காட்சியை வைத்து, "நீயா?" என்பது போல மீம்ஸ் போட்டுள்ளனர்.

அதேவேளையில், இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளளது. இதற்கு முன் அங்கு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டியான 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா தோல்வியைத் தழுவியிருந்தது. இதனால், "நியூசிலாந்தைப் பார்த்து பயமா?" என்று கேட்பது போலவும், அதற்கு "இல்லை.. உங்களைப் பார்த்துப் பயம் இல்லை.. அந்த அகமதாபாத் மைதானத்தைப் பார்த்துதான் பயம்" என்று இந்திய ரசிகர்கள் சொல்வது போலவும் வெளியாகி உள்ள மீம்ஸ்கள் இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளன.
