சென்னை : இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் வீரராக சுப்மன் கில் நிச்சயம் உருவாகுவார் என்று நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் 5 போட்டிகளில் விளையாடி 400 ரன்களை விளாசி இருக்கிறார். 2 சதம் மற்றும் 2 அரைசதம் உட்பட 400 ரன்களை சுப்மன் கில் விளாசியதன் மூலமாக அவர் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

நம்பர் 3 வரிசையில் களமிறங்கி வந்த சுப்மன் கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்த நிலையில் நம்பர் 3 வரிசையில் தன்னாலும் பேட்டிங் செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளார். இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், ராஜ்கோட் மைதானத்தில் சுப்மன் கில் 92 ரன்களை விளாசிய பின், அவர் வேறு ஒரு கட்டத்திற்கு நகர்ந்துவிட்டார்.
இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றிபெறுவதற்கு 4 போட்டிகள் வர வாய்ப்புகள் இருந்தது. ஆனால் களத்தில் இங்கிலாந்து அணி எடுத்த சில தவறான முடிவுகள் அந்த அணிக்கு எதிராக அமைந்துவிட்டது. இந்த டெஸ்ட் தொடரில் பிரஷரை சமாளித்து விளையாடிய இந்திய இளம் வீரர்கள் 2 பேர் மிரட்டிவிட்டார்கள். அதில் ஒருவர் துருவ் ஜுரெல், மற்றொரு வீரர் சுப்மன் கில்.
இந்த டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் அனைத்து வகையிலும் முன்னேறி இருக்கிறார். ஏனென்றால் சுப்மன் கில் இந்த தொடரில் ஷார்ட் மிட் விக்கெட் திசையில் ஃபீல்டிங் செய்தார். அது சுரேஷ் ரெய்னா மற்றும் விராட் கோலி இருவரும் ஃபீல்டிங் செய்த இடங்கள். அந்த இடத்தில் சுப்மன் கில் முதல் 2 போட்டிகள் ஃபீல்டிங் செய்யும் போது, கொஞ்சம் தடுமாறினார்.
ஆனால் 5வது போட்டிக்கு முன்பாகவே அவர் அந்த இடத்தில் எப்படி ஃபீல்டிங் செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொண்டார். பென் டக்கெட்டுக்கு அவர் பிடித்த கேட்ச் வேற மாதிரி இருந்தது. இதன் மூலம் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் முன்னேற வேண்டும் என்ற சுப்மன் கில்லின் தாகம் தெரிகிறது. ஜெய்ஸ்வால், ஜுரெல்லை விடவும் சுப்மன் கில்லை பாராட்டுவதற்கு வேறு காரணம் உள்ளது.
அவரின் குறுகிய கால கிரிக்கெட் வயதிலேயே ஏராளமான ஏற்ற இறக்கங்களை சுப்மன் கில் பார்த்துவிட்டார். அவர் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார்கள். அவரின் பேட்டிங்கில் உள்ள டெக்னிக் பற்றி பேசிவிட்டார்கள். அதனையெல்லாம் மீறி சுப்மன் கில் மேலே வந்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்வதை போல், பிரஷரை சமாளித்துள்ளதாக பாராட்டியுள்ளார்.