தரம்சாலா : இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோவ் வம்புக்கு இழுத்த பதிலடியாக இந்திய அணியின் சுப்மன் கில் மற்றும் சர்பராஸ் கான் மூவரும் கொடுத்த கமெண்ட் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 2ஆம் நாள் ஆட்டத்திற்கு பின் சுப்மன் கில் அளித்த பேட்டியின் போது, ஆண்டர்சனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல் பற்றி பேச விரும்பவில்லை. அது எங்களுக்குள் இருப்பதே நல்லது என்று கூறி சர்ச்சையை கூட்டினார். இதன் மூலம் ஜூனியர் வீரரான சுப்மன் கில்லை ஆண்டர்சன் ஸ்லெட்ஜிங் செய்தது தெரிய வந்தது.

இந்த நிலையில் 3ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கைகள் ஓங்கியுள்ளது. இந்த நிலையில் ஜானி பேர்ஸ்டோவ் அஸ்வின் பவுலிங்கில் சில சிக்சர்களை விளாசி இருந்தார். அவர் 38 ரன்கள் எடுத்திருந்த போது, குல்தீப் யாதவ் அட்டாக்கில் வந்தார். அப்போது ஸ்லிப் திசையில் சுப்மன் கில் ஃபீல்டிங் நிற்க, ஷார்ட் லெக் திசையில் சர்பராஸ் கான் ஃபீல்டிங் நின்றிருந்தார்.
அப்போது சுப்மன் கில்லிடம் பேர்ஸ்டோவ், ஆண்டர்சன் களைத்து போனதை பற்றி என்ன சொன்னாய்.. அதன்பின்னரே அவர் உன்னை வீழ்த்தியது நினைவிருக்கிறதா என்று உரையாடலை தொடங்கினார். அதற்கு சுப்மன் கில், "அதனால் என்ன.. சதமடித்த பின்னர் தான் ஆட்டமிழந்தேன்.. நீ எத்தனை சதம் அடித்துள்ளாய்?" என்று சுப்மன் கில் பதிலடி கொடுத்தார்.
அதற்கு பேர்ஸ்டோவ், இங்கிலாந்து மண்ணில் எத்தனை சதம் அடிக்கிறாய்? என்று மீண்டும் எகிறினார். அதற்கு சர்பராஸ் கான், "சில ரன்களை விளாசிவிட்டு ஓவராக துள்ளுகிறாய்" என்று கமெண்ட் அடிக்க, இந்த உரையாடல் ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. இந்த உரையாடல் முடிவடைந்த அடுத்த பந்தில் பேர்ஸ்டோவ் 39 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்திய மண்ணில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்காமல் அதிக இன்னிங்ஸை ஆடிய வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோவ் தான் முதலிடத்தில் உள்ளார். 24 இன்னிங்ஸ்களில் பேர்ஸ்டோவ் ஒரு சதத்தை கூட அடித்ததில்லை. இந்திய அணியின் சுப்மன் கில், சர்பராஸ் கான் இருவரும் விராட் கோலி ஸ்டைலில் பதிலடி கொடுத்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.