மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 356 ரன்கள் குவித்து இருக்கிறது. இதில் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில், அபாரமாக விளையாடி சதம் விளாசினார். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதை அடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பெரிய ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஏனென்றால் மாலை நேரத்தில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் இருக்காது.

இந்த சூழலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து ரசிகர்களை ஏமாற்றினார். இந்த நிலையில் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இந்திய அணி துணை கேப்டன் கில் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
விராட் கோலி தன்னுடைய இயல்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 55 பந்தில் 52 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கும். இதன் பிறகு ஸ்ரேயாஸ் ஐயரும், கில்லும் பாட்னர்ஷிப் சேர்ந்து அதிரடி காட்டினர். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 64 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். இதில் எட்டு பவுண்டர்கள் 2 சிக்சர்கள் அடங்கும்.
இதேபோன்று கே எல் ராகுலும் அதிரடியை காட்ட 29 பந்துகளின் 40 ரன்கள் சேர்த்தார். ஒருபுறம் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுபுறம் அதிரடி காட்டிய கில் 102 பந்துகளில் 112 ரன்கள் சேர்த்தார். இதில் 14 பவுண்டரி, மூன்று சிக்சர்கள் அடங்கும். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்த ஏழாவது சதம் இதுவாகும்.
ஹர்திக் பாண்டியா 17 ரன்களிலும், அக்சர் பட்டேல் 13 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களிலும் ஆட்டமிழக்க இந்திய அணி 50 ஓவர் முடிவில் 356 ரன்கள் எடுத்திருக்கிறது. இங்கிலாந்து பந்துவீச்சு தரப்பில் ஆதில் ரசித் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த போட்டியில் ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி, முகமது ஷமி ஆகிய மூன்று வீரர்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.