ஐதராபாத் : 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்ட புஜாராவுக்கு அளிக்கப்படாத சலுகை இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு இந்திய அணியில் அளிக்கப்பட்டு வருவதாக முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வி முன்னாள் வீரர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சுப்மன் கில்லின் ஆட்டம் தொடர்ந்து மோசமாக இருப்பதும், ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திணறுவது தொடர்கதையாகி வருவதும் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 10 இன்னிங்ஸ்களில் நம்பர் 3 வரிசையில் பேட்டிங் செய்துள்ள சுப்மன் கில், அதிகபட்சமாகவே 47 ரன்களை தான் சேர்த்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருந்து தற்போது வரை அவரின் பேட்டிங் சராசரி 21.00 ஆக மட்டுமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இடதுகை ஸ்பின்னர்களிடம் மிகவும் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறி வருகிறார்.
நேற்றைய ஆட்டத்தில் அவர் சிறிது நேரம் தாக்குபிடித்து ஆடியிருந்தாலும் ஆட்டமே மாறியிருக்கும். ஆனால் டக் அவுட்டாகி வெளியேறியது, ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மீதும் சுமையை அதிகரித்தது. புஜாராவின் சேவை போதும் என்று கூறி அவரின் இடத்தில் சுப்மன் கில் விளையாடி வருகிறார். ஆனால் புஜாராவை விடவும் மோசமான ஆட்டத்தை சுப்மன் கில் வெளிப்படுத்துவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே பேசுகையில், அடுத்தடுத்து வரும் போட்டிகளில் சுப்மன் கில் நிச்சயம் ரன்கள் சேர்க்க வேண்டும். அதேபோல் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள அவர் பிரத்யேக திட்டத்துடன் வர வேண்டும். ஏனென்றால் அவர் பேட்டினை கொஞ்சம் இறுக்கமாக பிடித்து ஆடுகிறார். அது பந்து பேட்டை நோக்கி நன்றாக வரும் ஆடுகளங்களிலும் அல்லது வேகப்பந்துவீச்சாளர்கள் பவுலிங் செய்யும் ஆடுகளங்களிலும் தான் தான் சரியாக இருக்கும்.
ஆனால் ஆடுகளத்தில் பந்து திரும்பினால், நாம் பேட்டினை கொஞ்சம் தளர்வாக பிடித்து கொண்டு, கட்டுப்பாட்டுடன் விளையாட வேண்டும். அதில் தான் சுப்மன் கில் பயிற்சி செய்ய வேண்டியுள்ளது. அதனை வெறும் 4 நாட்களில் செய்ய முடியாது. அதனால் மனநிலையில் மாற்றத்தை கொண்டு வர ராகுல் டிராவிட் பேச வேண்டும். சுப்மன் கில் நீண்ட நாட்களாக புஜாரா ஆடிய இடத்தில் விளையாடி வருகிறார்.
100 டெஸ்ட் போட்டிகளுக்கும் மேலாக விளையாடிய புஜாராவுக்கு கூட இந்திய அணியில் இவ்வளவு சலுகைகள் அளிக்கப்படவில்லை. ஆனால் சுப்மன் கில்லுக்கு அனைத்து வகையிலும் இந்திய அணி நிர்வாகத்தில் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் புஜாரா தான் நம்பர் 3ல் விளையாடினார். அப்போது சுப்மன் கில் தொடக்க வீரராக இருந்தார்.
அவராகவே நம்பர் 3 வரிசையில் விளையாட விரும்புவதாக கேட்டு விளையாடி வருகிறார். இந்திய மண்ணில் நம்பர் 3 வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்றால், திறமை மட்டும் போதாது. அவர் ஆட்ட நுணுக்கங்களையும் கற்று அறிந்து செயல்படுத்த வேண்டும். அவர் இளமையாக இருப்பதால், கற்கும் பருவத்தில் இருக்கிறார். ஆனால் விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் தன்னை நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீதான அழுத்தம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.