பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி செய்திருக்கும் பிளேயிங் லெவன் மாற்றம் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.
ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக இருக்கின்றது. முதல் டெஸ்ட் போட்டியில் கடைசி இன்னிங்ஸில் 371 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தும் இங்கிலாந்து அபாரமாக வென்றது.

இதன் காரணமாக இந்திய அணி தங்களுடைய பந்துவீச்சு படையை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். குறிப்பாக பும்ரா போட்டிக்காக பயிற்சி செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் பிளேயிங் லெவனிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். பும்ராவுக்கு உடல் தகுதி பிரச்சனை காரணமாக ஓய்வு வழங்க இருக்கின்றோம் என்று சுப்மன் கில் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் இந்திய அணி பந்துவீச்சு படையை மாற்றுவதற்காக குல்தீபு யாதவ், ஆர்ஸ்தீப் சிங் உள்ளிட்ட வீரர்களை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து ஜூலை ஒன்றாம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், எங்களுடைய முதல் பணியே இந்த ஆடுகளத்தில் எப்படி எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதாக தான் இருக்கும்.
இதனால் நாங்கள் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை வைத்து விளையாடுவதை விட பவுலரை வைத்து விளையாடவே விரும்புகின்றோம் என்று கூறினார். ஆனால் ஜூலை இரண்டாம் தேதி போட்டி தொடங்கிய பின் டாஸ் வீசும்போது பேசிய கில், அப்படியே ஒரு அந்தர்பல்டி அடித்து இருக்கின்றார். டாஸ் வீசும் போது இன்று பேசிய கில், நாங்கள் கூடுதலாக குல்தீப் யாதவை வைத்து விளையாடலாம் என்று தான் இருந்தோம்.
ஆனால் கடைசி போட்டிகளில் எங்களுடைய பேட்டிங் சரியாக இல்லை. இதன் காரணமாக பேட்டிங் கீழ் வரிசையில் பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக கூடுதல் ஆல்ரவுண்டர்களை சேர்த்து இருக்கின்றோம் என்று கில் கூறியுள்ளார். சுப்மன் கில் 24 மணி நேர இடைவெளியில் அவர் ஏன் தன்னுடைய யுத்தியில் இருந்து மாறி இருக்கின்றார். இது சரியான விஷயமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதல் டெஸ்ட் போல் தற்போது இம்முறையும் இங்கிலாந்து அணி தான் கடைசியாக பேட்டிங் செய்யப் போகிறது. இதனால் எதிரணியின் 20 விக்கெட்டையும் வீழ்த்த வேண்டிய பொறுப்பை நெருக்கடி இந்திய பவுலர்களுக்கு ஏற்பட்டுள்ளது.