லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் இந்திய அணி வெற்றி பெற மேலும் 135 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருந்தது. ஆனால் ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, ஜடேஜா மட்டும் தனி ஆளாக போராடி களத்தில் நின்றார்.
எனினும் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் கில், "நாங்கள் விளையாடிய விதத்தைப் பார்த்து எனக்கு உண்மையிலேயே பெருமையாக இருக்கின்றது. ஐந்து நாட்களாக நாங்கள் கடுமையாக போராடினோம்."

"கடைசி நாள் கடைசி செஷனில் வரை ஆட்டம் நகர்ந்து வந்திருக்கின்றது. கடைசி விக்கெட்டுக்கு நாங்கள் கடுமையாக போராடினோம். எங்களுடைய பங்களிப்பை நினைத்து நான் பெருமை கொள்கின்றேன். கைவசம் நிறைய விக்கெட் இருந்ததால் இந்த இலக்கை நாங்கள் எட்டி விடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது."
"ஆனால் இங்கிலாந்து வீரர்கள் அபாரமாக பந்து வீசினார்கள். நாங்கள் ஒரு இரண்டு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தால் நிச்சயம் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் எங்களை விட சிறப்பாக செயல்பட்டார்கள். பேட்ஸ்மேன்கள் களத்தில் நிற்கும் வரை வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை எங்கள் அணி வீரர்களுக்கு இருந்தது."
"ஏனென்றால் இலக்கு என்பது மிகப்பெரியது கிடையாது. ஒரு 50, 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்து இருந்தால், இந்த இலக்கை எட்டி இருக்கலாம். ஜடேஜா அனுபவமிக்க வீரர் எனவே அவருக்கு களத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். இதனால் நாங்கள் எந்த ஒரு மெசேஜையும் அவருக்கு அனுப்பவில்லை. கீழ் வரிசை வீரர்களுடன் இணைந்து அவர் பிரமாதமாக செயல்பட்டார்."
"முதல் இன்னிங்சில் நாங்கள் கூடுதலாக ஒரு 80 ,100 ரன்கள் அடித்திருந்தால் அது நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். ஏனென்றால் ஐந்தாவது நாள் ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது கடினம் என்று எங்களுக்கு தெரியும். அந்த ஆடுகளத்தில் 150 ரன்கள் சேஷ் செய்வது சிறந்த விஷயமாக இருந்திருக்கும். முதல் இன்னிங்ஸில் நாங்கள் பெரிய ஸ்கோர் எடுக்காதது தான் தோல்விக்கு காரணம் என நினைக்கின்றேன்."
"இதேபோன்று நேற்றைய நாளில் நாங்கள் கொத்தாக விக்கெட் இழந்ததும் தவறாக முடிந்துவிட்டது. கொஞ்சம் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாடி இருந்தால் நிச்சயம் இன்று வெற்றி பெற்றிருக்கலாம். சில சமயம் ஸ்கோர் கார்டை பார்க்கும்போது நாங்கள் எந்த அளவுக்கு விளையாடினோம் என்பது தெரியாது. ஆனால் உண்மையிலேயே இந்த டெஸ்ட் போட்டியில் எங்கள் அணி வீரர்கள் சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். இந்த கட்டத்தில் இருந்து இந்த தொடர் இன்னும் விறுவிறுப்பாக மாறும் என நினைக்கின்றேன்" என்று கேப்டன் கில் கூறியுள்ளார்.