மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி20 தொடரில் இந்திய அணி நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய நிலையில், முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஹர்ஷித் ரானா வீசிய ஒரே ஒவரில் சால்ட் 26 ரன்கள் அடித்தார். மூன்று ரன்கள் ஓடுகிறேன் என்று பில் சால்ட் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். இது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

பில் சால்ட் 26 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரி, மூன்று சிக்சர்கள் அடங்கும். ஹர்ஷித் ரானா வீசிய 4வது ஒவரில் பென் டக்கட் மற்றும் ஹாரி புரூக் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்த அது போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 19 ரன்களில் வெளியேற, கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் ஜேக்கப் போத்தேல் ஆகியோர் அரைசதம் கடந்த நிலையில் முக்கிய கட்டத்தில் ஆட்டம் இழந்தனர்.
இறுதியில் ஜோப்ரா ஆர்ச்சர் 21 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 47.4 ஒவ்வொரு முடிவில் 248 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய பந்துவீச்சு தரப்பில் ஜடேஜா, ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதை அடுத்து 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் இந்திய அணி களம் இறங்கியது. தனது அறிமுக போட்டியில் களம் இறங்கிய ஜெய்ஸ்வால் மூன்று பவுண்டரிகளை விரட்ட 22 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தடுமாறிய ரோகித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட்டின் பார்ம்க்கு திரும்புவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. ஏழு பந்துகளை எதிர் கொண்ட ரோஹித் சர்மா இரண்டு ரன்களில் வெளியேறினார். 19 ரன்களுக்கு இந்திய அணி இரண்டு விக்கெட்டுகள் இழந்து தடுமாறியபோது, கில்லுடன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினர். தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ், 30 பந்துகளில் அரைசதம் கடந்தார்
36 பந்துகளை எதிர்கொண்ட அவர் 59 ரன்கள் சேர்த்தார்.இதில் ஒன்பது பவுண்டரி, இரண்டு சிக்சர் அடங்கும். ஸ்ரேயாஸ் வெளியேறிய நிலையில் அக்சர் பட்டேலுக்கு புரமோஷன் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட அக்சர் தமக்கு பேட்டிங் செய்ய தெரியும் என்பதை நிரூபித்தார். 47 பந்துகளை எதிர்கொண்ட அவர் 52 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.
மறுமுனையில் துணை கேப்டன் கில் நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தார். அக்சர் பட்டேல், கே எல் ராகுல் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 பந்துகளில் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 14 பவுண்டரிகள் அடங்கும். இறுதியில் ஹர்திக், ஜடேஜா ஆகியோர் இணைந்து இந்திய அணியின் வெற்றியை 38.4 வது ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து உறுதி செய்தனர். இதன் மூலம் மூன்று ஒரு நாள் போட்டி கொண்டு தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.