அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த ஆறு மாதமாக விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு பிறகு கடும் விமர்சனங்களை சந்தித்து வந்தவர் என்றால் அது சுப்மன் கில் தான். இந்திய கிரிக்கெட்டின் இளவரசர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சுப்மன் கில், வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் சொதப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அது மட்டுமில்லாமல் அடிக்கடி காயம் ஏற்படுவதாக கூறி முக்கியமான போட்டிகளில் இருந்து வெளியேறி விடுவதாகும் குற்றச்சாட்டு இருந்தது. இந்த சூழலில் கில், இந்திய ஒரு நாள் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அதற்கும் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை வைத்தனர். அதற்கு கில், தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த தொடரில் கில் மொத்தமாக 259 ரன்கள் அடித்திருக்கிறார். குறிப்பாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் 102 பந்துகளில் 112 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் கில் தொடர் நாயகன் மற்றும் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கில், அணியின் வெற்றிக்காக உதவியது மகிழ்ச்சியை கொடுக்கின்றது. இது நிச்சயமாக நான் ஆடியதில் சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று. ஆடுகளம் தொடக்கத்தில் கொஞ்சம் சவால்களை கொடுத்தது. வேகபந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தை பயன்படுத்தி நன்றாக பந்து வீசினார்கள்.
அதை எதிர்கொண்டு நான் ரன்கள் சேர்த்தது எனக்கு மன நிறைவை கொடுத்திருக்கிறது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் நாங்கள் அதிக அளவு சிங்கிள்ஸ் எடுத்து விக்கெட்டுகளை பவர் பிளேவில் இழக்காமல் விளையாட வேண்டும் என்று கோலி,ஸ்ரேயாஸ் உடன் இணைந்து முடிவெடுத்தோம்.
அதன் மூலம் கிடைக்கும் உத்வேகத்தை பயன்படுத்தி எவ்வளவு ரன்கள் அடிக்க முடியும் என்று பார்ப்போம் என திட்டமிட்டோம். அதற்கு தகுந்தார் போல் தான் நாங்கள் விளையாடினோம்.நான் அதிகமாக எதையும் யோசிக்கவில்லை நம் முன் வீசப்படும் சவால்களை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் பொறுத்துதான் வெற்றி இருக்கிறது என்று கில் தெரிவித்துள்ளார்.