லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது. கடைசி இன்னிங்சில் 371 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி நிர்ணயிக்கும்.அதனை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், தோல்விக்கான காரணம் குறித்து பட்டியலிட்டார். இது குறித்து பேசிய அவர், "இந்த டெஸ்ட் மிகவும் சிறப்பானதாக எங்களுக்கு அமைந்தது. எங்களுக்கான வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் நாங்கள் பல கேட்ச்களை தவற விட்டோம்."

"அதுமட்டுமல்லாமல் எங்கள் அணியின் கீழ் வரிசை வீரர்கள் பெரிய அளவு ரன்கள் சேர்க்கவில்லை. இந்த இரண்டு விஷயங்களால் நாங்கள் இந்த போட்டியை இழந்து விட்டோம். நாங்கள் 430 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று நினைத்தோம்."
"ஆனால் கடைசி சில விக்கெட்டுகள் வெறும் 25 ரன்களில் நாங்கள் இழந்து விட்டோம். இன்று கூட எங்களுக்கு பல வாய்ப்புகள் அமைந்தது. ஆனால் அதை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. நாங்கள் ஏற்கனவே முதல் இன்னிங்சில் கடைசி கட்டத்தில் கொத்தாக விக்கெடுகள் இழந்ததை பற்றி பேசினோம்."
"அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் இந்த பிரச்சனையை நாங்கள் சரி செய்ய வேண்டும். இது போன்ற ஆடுகளங்களில் விக்கெட் எடுக்கும் வாய்ப்பு மிகவும் எளிதாக இருக்காது. எனினும் எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனுபவம் இல்லாதவர்கள். இளம் வீரர்களால் நிறைந்தது எங்கள் அணி. எனவே அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்."
"இன்றைய நாளில் முதல் செஷனில் நாங்கள் நன்றாகவே பந்து வீசினோம். பெரிய அளவு ரன்களை கொடுக்கவில்லை. ஆனால் பந்து பழையதாக மாறியவுடன் ரன்களை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. பந்து பழையதாக மாறிய பிறகும் விக்கெட்டை எடுக்கும் யுக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஜடேஜா நன்றாகத் தான் பந்து வீசி வாய்ப்புகளை ஏற்படுத்தினார். இதேபோன்று பும்ரா எந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. ஒவ்வொரு போட்டிக்கு முன்பு தான் நாங்கள் அதற்கான முடிவை எடுப்போம்" என்று கூறினார்.