மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் விராட் கோலியின் ரோகித் சர்மாவும் மிகப்பெரிய ஸ்கோர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இல்லை என்றால் டி20 உலக கோப்பையில் ஓய்வு பெற்றது போல் கோலியும், ரோகித் சர்மாவும் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள்.
குறிப்பாக ரோகித் சர்மா 38 வயதை நெருங்கி விட்டதால் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் பங்கு பெற இருக்கின்றது.

ஏற்கனவே பார்டர் கவாஸ்கர் தொடரில் இரு வீரர்களும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கங்குலி, சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருவரும் ரன்களை குவிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவும் விராட் கோலி மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்கள். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பயன்படுத்தப்படும் ஆடுகளமும் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறேன். உலகக்கோப்பை தொடரில் இந்த இரண்டு வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் இவர்கள் நன்றாக விளையாடுவார்கள் என நினைக்கின்றேன்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் இவர்கள் ரன் குவிப்பார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் தான் இந்த இரண்டு பேர்களும் சரியாக செயல்படவில்லை. இதனால் நிச்சயம் வரும் தொடர் மிகப்பெரிய மாற்றத்தை இவர்கள் இருவருக்கும் கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேபோன்று சாம்பியன்ஸ் கோப்பை தொடரை யார் வெல்வார் என்பது குறித்து கேள்விக்கு பதில் அளித்த கங்குலி, டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்று 50 உலகக் கோப்பையில் இறுதி போட்டி வரை இந்தியா சென்று இருக்கிறது.
எனவே சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகின்றேன். எனினும் இந்தியா எந்த அளவுக்கு திட்டங்களை களத்தில் செயல்படுகிறது என்பதை பொறுத்து அது அமையும். ஒரு நாள் அணியில் இந்திய வீரர்கள் அனைவரும் நல்ல முறையில் செயல்படுகிறார்கள். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அனைத்துமே பலமாக இருக்கிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகளும் பலமாக இருக்கிறது. பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் அவர்களையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. களத்தில் எந்த அணி சரியாக செயல்படுகிறார்களோ, அவர்களே வெற்றி பெறுவார்கள் என கங்குலி கூறியுள்ளார்.