லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் கடைசி இன்னிங்ஸில் 193 ரன்கள் என்ற இலக்கை கூட எட்ட முடியாமல் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது.
இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் அதிகபட்சமாக ஜடேஜா மட்டும்தான் தனி ஆளாக போராடி 61 ரன்கள் எடுத்தார்.அதன் பிறகு கேஎல் ராகுல் 39 ரன்கள் எடுத்தார். இந்த இரண்டு வீரர்களை தவிர மற்ற எந்த வீரர்களும் 20 ரன்களை கூட தாண்டவில்லை. இது தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது ஏமாற்றத்தை அளிப்பதாக கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்த தொடரில் இந்தியா பேட்டிங் செய்த விதத்தைப் பார்த்தால் அவர்கள் 193 ரன்கள் என்ற இலக்கை கண்டிப்பாக எட்டிருக்க வேண்டும்.
அதுவும் ஜடேஜா தனியாளாக நின்று போராடி ரன்களை சேர்த்தார். நமது வீரர்களின் பேட்டிங் திறனை பார்க்கும் போது நிச்சயமாக இந்த இலக்கை எட்ட முடியாதது ஏமாற்றத்தை தான் கொடுத்திருக்கின்றது. ஏனென்றால் இந்த போட்டியை நாம் வென்று இருந்தால் தொடரில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்க முடியும்.
இந்த ஏமாற்றம் எனக்கு மட்டுமல்ல வீரர்களுக்கும் கண்டிப்பாக இருக்கும் என நினைக்கின்றேன். டாப் ஆர்டர் வீரர்கள் கொஞ்சமாவது போராட்ட குணத்தை காட்டி இருந்தால் இந்த போட்டி இந்தியாவுக்கு சாதகமாக அமைந்திருக்கும். ஜடேஜா மிகவும் பிரமாதமாக செயல்பட்டார். அவர் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடுவார் என நான் நினைக்கின்றேன்.
இந்திய அணிக்காக அவர் 80 டெஸ்ட் போட்டிகள், 200 ஒருநாள் போட்டிகள் விளையாடி உள்ளார். எனவே அவருக்கு அதிகமான அனுபவம் இருக்கின்றது. அவருடைய பேட்டிங், பந்துவீச்சு, பில்டிங் என மூன்றிலும் பார்த்தால் நிச்சயமாக அவர் ஒரு ஸ்பெஷல் வீரர் என்று உங்களுக்கு புரியும். குறிப்பாக அவருடைய பேட்டிங் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மேம்பட்டு இருக்கின்றது. இந்திய அணியின் மிகவும் முக்கியமான வீரராக அவர் இருப்பார் என்று கங்குலி பாராட்டியுள்ளார். ஆனால் மற்ற இரண்டு ஆல் ரவுண்டர்களான வாஷிங்டன் சுந்தர் 4 பந்துகளில் டக் அவுட் ஆகியும் நிதீஷ்குமார் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.