மான்செஸ்டர்: இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிரா செய்து கொள்ளலாம் என்று முன் வந்த போது, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மறுத்தார். அப்போது வர்ணனையில் இருந்த இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், இந்திய அணி கைகுலுக்க கூடாது என்றும், மீதமுள்ள 15 ஓவர்களையும் விளையாட வேண்டும் என்றும் ஆர்ப்பரித்தார். இதனால் வர்ணனையில் இருந்த இங்கிலாந்து ஜாம்பவான்களே அலறியது இந்திய ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும், கடைசி நாளில் இந்திய அணி தரமான பதிலடியை கொடுத்திருக்கிறது. அதிலும் கடைசி ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே பென் ஸ்டோக்ஸ் வந்து டிராவில் முடிக்கலாம் என்று கைகொடுத்த போது, இந்திய அணி கைகுலுக்க மறுத்தது.

அப்போது வர்ணனையில் இருந்த சுனில் கவாஸ்கர், ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியை கலாய்க்க தொடங்கினார். அப்போது சுனில் கவாஸ்கர் பேசுகையில், இந்திய அணி பாவம் பார்க்க கூடாது. அடுத்த 15 ஓவர்களையும் கட்டாயம் விளையாட வேண்டும். இங்கிலாந்து அணியை மனதளவிலும், உடலளவிலும் களைப்படைய வைக்க வேண்டும்.
இதே இங்கிலாந்து அணி 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 600 ரன்கள் இலக்கு நிர்ணயித்த போது, அவ்வளவு கேள்விகளை எழுப்பியது. இந்திய அணியை பார்த்து செய்தியாளர்கள் எதற்காக 500 ரன்களிலேயே டிக்ளேர் செய்யவில்லை என்றெல்லாம் பேசினார்கள். இந்திய அணி வென்ற போதும், ஏன் முன்னதாக டிக்ளேர் செய்யவில்லை என்றெல்லாம் ஏளனமாக கிண்டல் செய்தார்கள்.
இப்போது அதே இங்கிலாந்து அணியை பார்த்து கேட்க வேண்டும். நீங்கள் ஏன் முதல் இன்னிங்ஸில் 500 ரன்களை எட்டிய போதே டிக்ளே செய்யவில்லை என்று கேள்வி எழுப்ப வேண்டும். 669 ரன்கள் எடுப்பதற்கு பதிலாக 500 ரன்களிலேயே டிக்ளேர் செய்திருந்தால், இங்கிலாந்து பவுலர்களுக்கு இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்த கூடுதலாக ஒரு மணி நேரம் கிடைத்திருக்குமே என்று கேளுங்கள்.
பென் ஸ்டோக்ஸை விடாதீர்கள். ஹாரி ப்ரூக் 600 ரன்கள் இலக்கு நிர்ணயித்தாலும் சேஸ் செய்வேன் என்று சொன்னாரே? அவரையும் கேளுங்கள்.. உங்களுக்கு 15 ஓவர்கள் கூடுதலாக வீசுவது அவ்வளவு கடினமா என்ன என்று கொந்தளித்தார். சுனில் கவாஸ்கரின் பேச்சால் அருகில் இருந்த இங்கிலாந்து ஜாம்பவான்கள் அமைதியானார்கள்.
தொடர்ந்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், இந்திய அணியின் ஆட்டம் எனக்கு நிம்மதியை மட்டும் கொடுக்கவில்லை. நான் பெருமிதமாக உணர்கிறேன். நீங்கள் ஃபிளாட் பிட்ச் கொடுங்கள், ஸ்விங் பிட்ச் கொடுங்கள்.. 5வது நாளில் கைகளில் 6 விக்கெட் மட்டுமே இருந்த போதும் இந்திய அணி போராடி சாதித்துள்ளது. இதுதான் இந்திய அணி என்று கர்வமாக பேசி இருக்கிறார்.