மும்பை: 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணிக்கு சவாலாக அமையவுள்ள மூன்று இங்கிலாந்து வீரர்கள் குறித்து முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் இந்திய வீரர்கள் திறம்படச் செயல்பட்டு வருகின்றனர். மறுபுறம், சூப்பர் 8 சுற்றின் மூலம் இங்கிலாந்து அணி மீண்டும் தனது பழைய ஆட்டத்திறனுக்குத் திரும்பியுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தின் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கும், பந்து எழும்புவதற்கும் சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு நேரத்தில் பனியின் தாக்கமும் ஆட்டத்தின் முடிவில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதும் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனுமான சுப்ரமணியம் பத்ரிநாத், தனது யூட்யூப் சேனலில் இங்கிலாந்து அணி குறித்துப் பேசியுள்ளார். அதில், இங்கிலாந்து அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் இந்திய அணிக்கு சவாலாக இருப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பேட்டிங்கைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணியின் நடுத்தர வரிசை பேட்ஸ்மேன் ஹாரி புரூக் நல்ல ஃபார்மில் உள்ளார். வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டையும் அவர் சிறப்பாக எதிர்கொண்டு ரன்களைச் சேர்ப்பார் என்பதால் அவர் இந்திய அணிக்கு சவாலாக இருப்பார் என்று பத்ரிநாத் கூறியுள்ளார்.
பந்துவீச்சைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் ஆகிய இருவரையும் பத்ரிநாத் குறிப்பிட்டுள்ளார். வான்கடே மைதானத்தில் பந்து சற்று கூடுதலாக எழும்பும் என்பதால், ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சு இந்திய அணியின் தொடக்க வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
அதேபோல, சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் பந்தை மிகவும் மெதுவாக வீசக்கூடியவர். ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக மாறும்போது அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். எனவே, இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களது கால்களைச் சரியாகப் பயன்படுத்தி முன்வந்து விளையாடினால் மட்டுமே அவரது பந்துவீச்சைச் சமாள்ளதாக முடியும் என்று பத்ரிநாத் அறிவுறுத்தியுள்ளார்.

இரு அணிகளிலும் சிறந்த வீரர்கள் இருப்பதால் இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரசிகர்கள் தங்களது அணி சொந்த மண்ணில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். அதே வேளையில், இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என அந்த அணியின் முன்னாள் வீரர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
