கேண்டர்பரி: இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்காவிட்டாலும், இங்கிலாந்தில் தங்கி இருக்குமாறு வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு இந்திய அணி நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளனர். அதற்கு முன்பாக இந்தியா 'ஏ' அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு அங்கு பயிற்சிப் போட்டிகளில் விளையாடுகிறது. அந்த இந்தியா 'ஏ' அணியில்தான் ஹர்ஷித் ராணா இடம் பிடித்திருக்கிறார்.
இவர் இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருந்தால், அதனால் அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் இடம் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், ஹர்ஷித் கான், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதே சமயம், அவர் தற்போது இந்தியா 'ஏ' அணியில் இடம் பிடித்திருக்கிறார்.
இங்கிலாந்தில் கூடுதல் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான தேவை இருப்பதால்தான் முதற்கட்ட அணியிலேயே ஐந்து வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அவர்களுடன் ஷர்துல் தாக்குர் இருக்கிறார். பும்ராவால் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட முடியாது என முன்பே கூறியிருக்கிறார்.
எனவே, பும்ரா பாதி தொடரில் விலக வேண்டிய நிலை ஏற்பட்டால், மாற்று வேகப்பந்துவீச்சாளரை அணியில் சேர்க்க வேண்டும். அதற்காகவே ஹர்ஷித் ராணாவை இங்கிலாந்திலேயே தங்கி இருக்குமாறு இந்திய அணி நிர்வாகம் அறிவுறுத்தி இருப்பதாக தெரிகிறது.
பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு ஹர்ஷித் ராணா மீது தனிப்பட்ட விருப்பம் இருப்பதால்தான் அவரை ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலேயே தேர்வு செய்தார் என்ற ஒரு விமர்சனம் உள்ளது. தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஹர்ஷித் ராணா இடம் பெறவிட்டாலும், அவரை அங்கே இருக்குமாறு அறிவுறுத்தி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.