IND vs ENG : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்றிருக்கிறது. இங்கிலாந்து அணியில் வெற்றிக்கு காரணம் இரண்டு வீரர்கள். ஒருவர் பேட்டிங்கில் ஆலிவ் போப். இரண்டாவது வீரர் பந்துவீச்சில் டாம் ஹார்ட்லி. தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய டாம் ஹார்ட்லி முதல் இன்னிங்சில் 25 ஓவர்களை வீசி 131 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
அவர் வெறும் இரண்டு விக்கெட் தான் கைப்பற்றினார். ஒரு ஓவருக்கு ஐந்து ரன்கள் என்ற விதம் ஒரு நாள் கிரிக்கெட்டில் செயல்பட்டது போல் பந்து வீசினார். அவரைவிட பேட்ஸ்மேனாக அறியப்படும் ஜோ ரூட் 29 ஓவர்கள் வீசி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி 79 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி டாம் ஹாட்லியை தேர்வு செய்ததன் மூலம் தவறு செய்து விட்டதாக ரசிகர்கள் விமர்சித்தனர்.

ஏனென்றால் டாம் ஹார்ட்லி இதற்கு முன்பு வெறும் 20 உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் தான் விளையாடி இருக்கிறார். அதிலும் அவர் பெரிய அளவில் எதுவுமே சாதிக்கவில்லை. எனினும் 2வது இன்னிங்சில் 7 இந்திய பேட்ஸ்மேன்களை வீட்டுக்கு அனுப்பி , 91 ஆண்டுகளில் அறிமுக டெஸ்டில் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் இப்படி ஒரு செயல்பாட்டை செய்தது இல்லை என்ற சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில் தான், டாம் ஹார்ட்லிக்கு பின்னால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் செய்த செயலை நாம் கவனிக்க வேண்டும். பொதுவாக இந்தியா போன்ற நாடுகளில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேனோ, பவுலரோ எவ்வளவு அபாரமாக செயல்பட்டாலும் அணியில் இடம் கிடைப்பதில்லை.
ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெறும் 20 உள்ளூர் போட்டிகளில் விளையாடிய ஒரு சுழற் பந்துவீச்சாளருக்கு அதுவும் பெரிய அளவில் சாதிக்காத ஒரு வீரருக்கு எப்படி வாய்ப்பு கொடுத்தது என்ற கதையை அறிந்து கொண்டு ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் செயல்பட வேண்டும். ஒரு செயலை முடிக்க வேண்டும் என்றால் அதற்கு தகுந்த நபரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி அந்த நபர் கிடைக்க வில்லை என்றால் இருக்கும் நபரை வைத்துக் கொண்டு அதற்கு ஏற்ற யுக்திகளை மாற்றி அமைக்க வேண்டும்.
இங்கிலாந்து அணி இந்த இரண்டாவது யுத்தியை தான் பயன்படுத்தியது. அதாவது இந்திய ஆடுகளங்களில் உயரமான இடது கை சுழற் பந்துவீச்சாளரான அக்சர் பட்டேல் கடந்த சில ஆண்டுகளில் பெரிய தாக்கத்தை இந்திய மண்ணில் ஏற்படுத்தினார்.இதனை கவனித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அப்படி ஒரு வீரர் நம்மிடம் இருக்கிறாரா என்பதை தேடினார்கள். அப்போதுதான் இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் நடுவர்களுக்கு ஐ ஹாக் என்ற கேமராக்கள் வழங்கப்படுகிறது.
இந்த ஐஹாக் கேமரா மூலம் பவுலர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள். பேட்ஸ்மேன்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கண்காணிக்க முடியும். இந்த ஐஹாக் கேமராவை பார்த்தபோதும் ஹார்ட்லி தன்னுடைய உயரத்தைப் பயன்படுத்தி பந்துகளை நன்றாக திருப்புகிறார் என்று தெரியவந்தது. எனினும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இவர் விளையாடுவதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உணர்ந்தது.
இதை அடுத்து டாம் ஹார்ட்லி கண்காணித்து வந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அக்சர் பட்டேலை போல் இவரும் இந்திய ஆடுகளத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதை நம்பியது. இதற்காக டாம் ஹார்ட்லியை இந்தியாவுக்கு எதிரான தொடரில் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் டாம் ஹார்ட்லி தடுமாறினாலும் இரண்டாவது இன்னிங்ஸில் எதற்காக தேர்வு செய்யப்பட்டமோ அதற்கான வேலையை கச்சிதமாக செய்து முடித்தார். கிரிக்கெட் மூலம் பெரிய அளவில் காசு பார்க்க முடியாத இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பவுலரை கண்டுபிடித்து இருக்கிறது.
ஆனால் பல்லாயிரம் கோடி கணக்கில் லாபம் பார்க்கும் இந்திய கிரிக்கெட் வாரியம், ஒரு உள்ளூர் போட்டியை கூட ஒளிபரப்ப முடியாத நிலையில் இருக்கிறது. அப்புறம் எப்படி இது போன்ற தொழில்நுட்ப கேமராவை நாம் போட்டியில் பயன்படுத்த முடியும். அது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்று பிறந்து வளர்ந்த வீரர்கள் இந்தியாவில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் திறமையை பலமுறை நிரூபித்தும் பல சதங்களை அடித்தும் பல விக்கெட்டுகளை வீழ்த்தியும் இந்திய டெஸ்ட் அணியில் ஒரு போட்டியில் விளையாட கூட வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் இங்கிலாந்து போன்ற நாடுகளில் நமக்கு இந்த வீர தான் தேவை.
இந்த வீரருக்கு உயரம் சாதகமாக இருக்கிறது என்பதை தொழில் நுட்பம் மூலம் கணித்து கச்சிதமாக அணியை கட்டமைக்கிறது. மேலும் இந்த கேமராக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்படாத போட்டிகளுக்கு கூட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடுவர்களை வைத்து பயன்படுத்துகிறது. ஏனென்றால் இந்த கேமராவில் மூலம் பவுலர்களின் ஒவ்வொரு பந்தையும் கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் முடியும் என்பதால் இது வெளிநாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் பிசிசிஐயில் அரசியல் செய்யவும் படம் பார்க்கவும் மட்டுமே நேரம் இருக்கிறது.