IND VS ENG : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது மிகப்பெரிய விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இங்கிலாந்து அணி பேஸ் பால் என்ற யுக்தியை பயன்படுத்தி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறது.
இதேபோன்று இங்கிலாந்து வீரர் டாம் ஹார்ட்லி அறிமுக போட்டியிலே இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் நம் நாட்டிலேயே சமாளிக்க இந்திய வீரர்களும் அதிரடியாக விளையாட வேண்டும் என்று ராகுல் டிராவிட் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வந்தனர். இந்த நிலையில் இங்கிலாந்தின் சுழற் பந்துவீச்சை சமாளிக்க இந்தியா புதிய யுத்தி ஒன்றை பயன்படுத்தப் போகிறது. முதல் டெஸ்டில் இந்திய வீரர்கள் இங்கிலாந்து சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது மிகவும் தற்காப்புடன் விளையாடினர்.
இதனால் தான் ரன் சேர்க்க முடியாமல் அழுத்தம் ஏற்பட்டு விக்கெட்டுகளை இந்தியா பறி கொடுத்ததாகவும் கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர். மேலும் ஸ்ரேயாஸ் ஐயர், கில் போன்ற வீரர்கள் சுழற் பந்து வீச்சை அடித்து ஆடாமல் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் வீரர்கள் ரன் சேர்க்க இங்கிலாந்தை காப்பியடித்து ராகுல் டிராவிட் அதே ஒரு திட்டத்தை ஃபாலோ செய்கிறார்.
விசாகப்பட்டினத்தில் பயிற்சியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஈடுபட்டபோது பலரும் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி பயிற்சியை மேற்கொண்டனர். முதல் டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் அடிக்கடி ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்விப் ஆடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக ஆலி போப், இந்தியாவில் சுழற் பந்துவீச்சை ஸ்விப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் என தொடர்ந்து ஆடி நெருக்கடி ஏற்படுத்தினார் .
இதனால் தற்போது அதே திட்டத்தை இந்திய வீரர்களும் காப்பியடிக்க உள்ளனர். நேற்று பயிற்சியில் ராகுல் டிராவிட் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் என அனைவரும் கண்காணிப்பில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை ஆடி பயிற்சி செய்து வந்தனர். இதன் மூலம் இங்கிலாந்தை எதிர்கொள்ள ஸ்வீப் என்ற ஆயுதத்தை இந்தியா பயன்படுத்த போகிறது.பொதுவாக சுழற் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை என்றால் தான் ஸ்வீப் ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற ஷாட்டுகளை ஆடி வெளிநாட்டு வீரர்கள் ரன்களை சேர்ப்பார்கள்.
இதன் மூலம் ரன்கள் கிடைத்தாலும் சில ஆபத்து இருக்கிறது. ஸ்வீப் ஷாட்டை சரியாக விளையாடவில்லை என்றால் lbw ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது. ஸ்வீப் ஷாட்டை கொஞ்சம் தவறவிட்டாலும், ஆட்டமிழக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த ஸ்வீப் என்ற ஆயுதம் இந்தியாவுக்கு கைகொடுக்குமா இல்லை இந்தியா எப்போதும் போலவே தங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமா என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.