லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தனது பெயரை வைக்க வேண்டாம் என சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்புக்கு (ECB) கோரிக்கை வைத்திருக்கிறார். இதன் மூலம் முன்னாள் இந்திய கேப்டன் பட்டோடியின் பெயரை நீக்குவதற்கான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க சச்சின் முயற்சி எடுத்து இருக்கிறார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆன டெஸ்ட் தொடர் 'பட்டோடி டிராபி' என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த பெயரை மாற்றுவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு முயற்சி எடுத்து வருகிறது. டெண்டுல்கர் - ஆண்டர்சன் டிராபி எனத் தொடருக்குப் பெயரை மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்த அறிவிப்பு கடந்த வாரமே வெளியாகி இருக்க வேண்டியது. அப்போது அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து காரணமாக இந்த அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இதனிடையே, பட்டோடியின் பெயரை நீக்குவதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மன்சூர் அலிகான் பட்டோடியின் பெயரால்தான் இந்த தொடருக்கு 'பட்டோடி டிராபி' என்ற பெயர் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் இங்கிலாந்து வீரர்களின் பெயர் சேர்க்கப்படாததன் காரணமாகவே, இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு இரண்டு அணிகளைச் சேர்ந்த ஜாம்பவான் பந்துவீச்சாளரான ஆண்டர்சன் பெயரை சேர்ப்பதற்கு முயற்சி எடுத்தது. அதற்காகவே இந்திய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர் பெயரையும், இங்கிலாந்து கிரிக்கெட்டின் ஆகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் பெயரையும் இணைத்து 'டெண்டுல்கர் - ஆண்டர்சன் கோப்பை' என வைப்பதற்கு முயற்சி எடுத்தது.
இது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், முன்னாள் வீரர்கள் மற்றும் பிசிசிஐ அமைப்பில் இருக்கும் சில அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பிடம் தனது பெயரை அந்த கோப்பைக்கு வைக்க வேண்டாம் என கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் பட்டோடியின் பெயர் நீக்க சர்ச்சைக்கு சச்சின் முற்றுப்புள்ளி வைக்க முயற்சி எடுத்து இருக்கிறார். எனினும், இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு இது குறித்து என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.