லண்டன்: இந்திய அணியின் வேகப்பந்துவீச்சுப் புயல் ஜஸ்பிரித் பும்ரா-வின் பணிச்சுமையைக் குறைத்து, அவரை நீண்ட காலத்திற்குப் பாதுகாக்க வேண்டுமெனில், இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் கிளென் மெக்ராத் அறிவுரை கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது போட்டியிலிருந்து ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே, 5 போட்டிகளில் 3-ல் மட்டுமே பும்ரா பங்கேற்பார் என அணி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது.

அதன்படி, முக்கியமான கடைசிப் போட்டியில் பும்ரா களமிறங்கவில்லை. கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு, அவரது உடற்தகுதியை பிசிசிஐ தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அதனால் அவர் இனி அனைத்து தொடர்கள் மற்றும் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தான் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் கிளென் மெக்கிராத் பும்ரா குறித்து ஆலோசனை ஒன்றை அளித்துள்ளார். "பும்ரா போன்ற ஒரு மேட்ச் வின்னரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு போட்டிகளில் விளையாட வைக்க விரும்புவது இயல்பு. ஆனால், அவரது வித்தியாசமான பந்துவீச்சு பாணி, மற்ற வேகப்பந்துவீச்சாளர்களை விட அவரது உடலுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது" என்று மெக்ராத் கூறியுள்ளார்.
மேலும், "பும்ரா தொடர்ந்து போட்டிகளில் விளையாடும்போது, அவருக்குக் காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஒரு கேப்டனும், அணி நிர்வாகமும், முக்கியமாக பும்ராவும் சேர்ந்துதான் அவர் எப்போது, எவ்வளவு பந்து வீச வேண்டும் என முடிவெடுக்க வேண்டும். உங்கள் சிறந்த பந்துவீச்சாளர் தொடர்ந்து பந்துவீச வேண்டும் என்றுதான் விரும்புவீர்கள்."
"பும்ரா சிறிய ஸ்பெல்களில் பந்துவீசினால், எதிரணி பேட்ஸ்மேன்கள் அந்த 3-4 ஓவர்களை எளிதாகக் கடந்துவிடுவார்கள். எனவே, பும்ராவின் பணிச்சுமையைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய மற்றொரு திறமையான வேகப்பந்துவீச்சாளர் குழுவை இந்தியா உருவாக்க வேண்டும். அப்போதுதான், பும்ரா நீண்ட ஸ்பெல்கள் வீச வேண்டிய கட்டாயம் ஏற்படாது" என்று மெக்ராத் விளக்கினார்.
மேலும், ஒரு வேகப்பந்துவீச்சாளருக்குப் போதுமான ஓய்வுக்காலம் (off-season) மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்திய மெக்ராத், "வருடம் முழுவதும் தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருந்தால் காயங்கள் ஏற்படுவது இயல்பு. 99.9% வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வுக்காலம் அவசியம்" என்றார்.
பும்ரா இல்லாத நிலையிலும், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை 247 ரன்களுக்குள் சுருட்டியதுடன், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்து 52 ரன்கள் முன்னிலை பெற்றது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆகாஷ் தீப் அரைசதம் அடித்து அசத்தினார்.