ஐதராபாத் : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணி நட்சத்திர வீரர் கே எல் ராகுல் விலகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அபாரமாக விளையாடிய மூன்று வீரர்களில் கே எல் ராகுலும் ஜடேஜாவும் அடங்குவார்கள்.
இந்த நிலையில் ஜடேஜாவுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் இந்தத் தொடரில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் இந்திய அணியின் நட்சத்திர வீரரும் விராட் கோலி இடத்தில் களம் இறங்கிய கே எல் ராகுல் தற்போது காயம் காரணமாக இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகி இருக்கிறார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. முதல் இன்னிங்ஸில் கே எல் ராகுல் அபாரமாக விளையாடி 123 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார்.
இதேபோன்று இரண்டாவது இன்னிங்ஸில் அவர் 48 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். ஏற்கனவே விராட் கோலி இல்லாத நிலையில் தற்போது கே.கே.எல் ராகுலும் ஜடேஜாவும் விலகி இருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.எனினும் கெட்டதில் ஒரு நல்ல விஷயம் நடக்கிறது என்று கூறுவார்களே, அதே போல் தற்போது இந்திய அணியில் ரஞ்சி கிரிக்கெட்டில் சதம் சதமாக அடித்து வரும் சர்பிராஸ் கான் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
தற்போது இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்திய ஏ அணி ஆட்டத்தில் சர்பிராஸ்கான் 98 ரன்கள் மற்றும் சதம் ஆகிய ஸ்கோரை அடித்திருந்தார். இதற்கு முன்பு தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய சீனியர்கள் எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்திருந்தார். ரஞ்சி கோப்பையில் டான் பிராட்மனுக்கு பிறகு அதிக சராசரி வைத்திருக்கும் வீரர் என்ற பெருமையும் சர்பிராஸ் கானுக்கு கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதனால் ஜடேஜாவின் இடத்திற்கு சுந்தர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.சுந்தருக்கு பேட்டிங்கும் நன்றாக வரும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோன்று இடது கை சுழற் பந்துவீச்சாளர் சௌரப் குமார் மூன்றாவது வீரராக அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.