ஐதராபாத் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நடுவர் ஒரு ரன்னை அந்த அணிக்கு குறைத்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் எப்போதுமே ஒரு ரன் கூட மிகப் பெரிய வித்யாசத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா செய்த தவறால் இங்கிலாந்துக்கு 6 ரன் முதலில் வழங்கப்பட்டது. ஆனால் அதன் பின் ஒரு ரன் குறைக்கப்பட்டது. இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இங்கிலாந்து அணி வீரர்கள் ரேஹான் அஹமத் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பும்ரா ஓவரில் பேட்டிங் செய்து வந்தனர். அப்போது பும்ரா வீசிய பந்தை ஸ்குயர் திசையில் ரெகான் அடித்தார். இந்திய பில்டர் ஒருவர் பவுண்டரி லைனை பந்தை பிடித்து எறிந்தார். எனினும் இந்த பந்தை பிடிக்க விக்கெட் கீப்பரும் தவறவிட, அதன் பின் நின்ற வீரரும் பிடிக்கவில்லை.
இதனால் பந்து பவுண்டரி சென்றது. அதற்குள் இங்கிலாந்து வீரர்கள் இரண்டு ரன்கள் ஓடி விட்டனர். முதலில் இதற்கு ஆறு ரன்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் நடுவர் கொடுக்கப்பட்ட ஆறு ரன்னில் ஒரு ரன்னை குறைத்து 5 ரன்னாக மாற்றினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. ஏன் ஒரு ரன் குறைக்கப்பட்டது என்பது குறித்து இங்கிலாந்து வீரர்கள் நடுவரிடம் முறையிட்டனர்.
அதற்கு வீரர் பந்தை எரிந்த போது பேட்ஸ்மேன் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்து செல்லவில்லை என்று நடுவர் கூறினார். இதனால் ஒரு ரன் குறைக்கப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.ஆனால் இதே போன்ற ஒரு நிகழ்வு 2019 ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை இறுதி போட்டியில் நிகழ்ந்தது.அப்போது இதே போல் பேட்ஸ்மேன்கள் ரன்கள் ஓடிய போது ஒருவரை ஒருவர் கடக்காமல் இருந்த நிலையில் பில்டர் எரிந்த பந்து பௌண்டரிக்கு சென்றது.
எனினும் அப்போது ஐந்து ரன்கள் கொடுக்காமல், 6 ரன் தரப்பட்டது. ஆனால் இன்றைய போட்டியில் ஒரு ரன் குறைத்து வழங்கப்பட்டது. எம்சிசி விதி 19.8 இன் படி பில்டர் பந்தை எரிவதற்கு முன் பேட்ஸ்மேன்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்து ரன்கள் ஓடி இருக்க வேண்டும். இல்லையெனில் அந்த ரன் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.