மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், பும்ரா தான் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என கடந்த மாதம் வரை எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், ஏன் பும்ராவுக்கு கேப்டன் பதவி அளிக்கப்படவில்லை என்பது குறித்து தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் பத்திரிகையாளர் சந்திப்பில் பதில் அளித்தார்.
என்ன காரணத்தால் பும்ராவுக்கு கேப்டன் பதவி அளிக்கப்படவில்லை என்பது குறித்து அவர் பேசுகையில், "இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ரா அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதற்கு தயாராக இல்லை. அவர் மூன்று அல்லது நான்கு போட்டிகளில் தான் விளையாடுவார். இந்த தொடர் எப்படி செல்கிறது என்பதை வைத்தும், அவரது பணிச்சுமை எப்படி இருக்கிறது என்பதை வைத்தும் எத்தனை போட்டிகளில் விளையாடுவார்? என்பதை பார்க்க வேண்டும்."

"எத்தனை போட்டிகளில் விளையாடினாலும், அவர் நமது சொத்து. அவர் அணியில் இருப்பதை நினைத்து நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும். அவர் ஒரு வீரராக நமக்கு மிகவும் முக்கியமானவர். நாம் நிறைய பேரை கையாளும்போது நமது தனிப்பட்ட முடிவுகள் முக்கியத்துவம் பெறாது. நாங்கள் அவரிடம் கேப்டன்சி குறித்து பேசினோம். பும்ரா இதை (கேப்டன் பதவி அளிக்காததை) ஏற்றுக்கொண்டார்."
"பும்ராவுக்கு அவருடைய உடல் எங்கே இருக்கிறது என அவருக்குத் தெரியும். கே.எல். ராகுல் நீண்டகாலமாக கேப்டனாக செயல்படவில்லை. அவர் தரமான வீரர். ராகுல் இங்கிலாந்தில் மிகப்பெரிய ஆட்டத்தை ஆடுவார் என்று எதிர்பார்க்கிறோம். பும்ராவுக்கு கேப்டன் பதவி அளிக்காததை பொறுத்தவரை அது அவரது பணிச்சுமை மேலாண்மை சார்ந்தது," இவ்வாறு அஜித் அகர்கர் விளக்கம் அளித்தார்.
இந்திய அணி இங்கிலாந்தில் ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை சுமார் ஒன்றரை மாத காலம் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் ஆகியோர் இல்லாத இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து மண்ணில் வெற்றிகளை குவிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.