மும்பை : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது கேப்டன்சி ரகசியம் குறித்த சீக்ரெட்டை வெளிப்படையாக கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்றுள்ள ரோகித் சர்மா, இந்திய அணியின் 3 வடிவங்களுக்குமான கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எந்த இலக்கு என்றாலும் ஒருகை பார்த்துவிடலாம் என சேஸிங் மற்றும் பவுலிங் செய்ய களமிறங்கும் ரோகித் சர்மா கேப்டன்சி ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் களத்தில் நடக்கும் மாற்றங்களை உடனடியாக கவனித்து, அதற்கேற்ப பவுலிங் மாற்றங்களை செய்வதில் வல்லவர்.

இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற தனியார் நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேப்டன் ரோகித் சர்மா தலைமை பண்பு குறித்து பேசியுள்ளார். அதில், ஒரு தலைவனாக வீரர்களின் மனதில் நம்பிக்கையை விதைப்பது அவசியம் என்று நினைக்கிறேன். அவர் ரோல் என்ன என்பதை கடந்து, அவர் எனது அணியின் முக்கியமான வீரர் என்பதை அவர் மனதில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். ஒரு அணி வெற்றிபெற, அத்தனை வீரர்களின் பங்களிப்பும் முக்கியம்.
6 அல்லது 7 பேட்ஸ்மேனாக களமிறங்கி 10 பந்துகள் மட்டுமே விளையாடினாலும் சரி, அவரும் முக்கியமான வீரர் தான். அவர் பங்களிப்பு இருந்தால் தான் வெற்றியை ருசிக்க முடியும். கேப்டனாக ஒவ்வொரு வீரருடனும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பேன். பிரச்சனை குறித்த அவர்களின் புரிதலை அறிந்து அவர்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும். சவாலான நேரங்களில் அணிக்குள் நம்பிக்கையை அதிகரித்து, வீரர்கள் மன உறுதியுடன் இருக்க செய்வது அவசியம்.
ஒவ்வொரு போட்டிக்கும் தயாராகும் போது முழு திறமையும் வெளிப்பட மனஉறுதி மிகவும் அவசியம். சாதகமில்லாத பிட்ச்களில் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்ற சூழலில், எப்போதும் பயிற்சியை மட்டும் அதிகரிப்பேன். அதன் மூலம் எனது நம்பிக்கையையும், ஃபார்மையும் உறுதி செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். கேப்டன்சி என்பது சூழலுக்கு ஏற்ப செயல்பட்டு, வீரர்களை நல்ல மனநிலையில் வைப்பதே போதுமானது என்று எளிமையான தனது கேப்டன்சி மந்திரத்தை ரோகித் சர்மா கூறியுள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.